கோவனை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மக்கள் அதிகாரம் இயக்கம், காங்கிரஸார் போராட்டம்
சென்னை: தமிழக முதல்வரை விமர்சித்து டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி பாடல் பாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பாடகர் கோவனை, விடுதலை செய்யக்கோரி மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் மற்றும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி குழுமணி அருகேயுள்ள அரவானூரைச் சேர்ந்தவர் கோவன் (51). இவர் மக்கள் கலை இலக்கியக் கழக (மகஇக) கலைக் குழு மையப் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
Kovan's arrest an attack on freedom of expression : People's power #FightforKovan pic.twitter.com/mGd5MhZ4pw
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) November 2, 2015
மது விலக்கை வலியுறுத்தி நடத்திவரும் கலை நிகழ்ச்சிகளில் கோவன் பாடிய "மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடல் மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களிலும் இந்தப் பாடல் பிரபலமாகி வருகிறது. இந்தப் பாடல் தமிழக முதல்வரை விமர்சிப்பதாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை இரவு சென்னையிலிருந்து திருச்சி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பாடகர் கோவனை அவரது வீட்டுக்குச் சென்று கைது செய்து சென்னைக்கு கொண்டு சென்றனர்.
ரசசிய இடத்தில் கோவனை போலீஸார் விசாரித்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 6-ஆம் தேதி வரை காவலில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர்மீது தேசத்துரோக வழக்கு மற்றும் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துவது, குற்றம் செய்ய தூண்டுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவனின் கைதிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கோவனை விடுதலை செய்யக்கோரி சென்னை தி.நகரில் மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், காங்கிரஸாரும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தினர்.