அடுத்த "அம்மா".. வாரச் சந்தை.. விரைவில்.. சென்னையில்!
சென்னை: அதிமுகவின் அம்மா திட்டங்களில் அடுத்தபடியாக அம்மா வாரச் சந்தையை சென்னையில் அறிமுகம் செய்யவுள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் அம்மா வாரச் சந்தை அமைக்கப்படவுள்ளது.
இந்த அம்மா வாரச் சந்தைகளில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கலாம். முதல் கட்டமாக மின்ட், அரும்பாக்கம், கோட்டூர்புரத்தில் 3 சந்தைகள் அமைக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்குள் இந்த சந்தைகளைத் திறக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக அம்மா வாரச்சந்தை திறக்கப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒரே இடத்தில் பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி செல்லக்கூடிய வகையில் இந்த வாரச்சந்தை அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.
200 கடைகள் இடம் பெறும் அம்மா வாரச்சந்தையை அமைப்பதற்கான திட்டப் பணிகளை மாநகராட்சி ஆய்வு செய்து வந்தது. சென்னையில் அம்மா வாரச்சந்தை எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்து இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. ஆனால் இடையில் சட்டசபைத் தேர்தல் குறுக்கிட்டதால் இந்தப் பணிகள் நின்று போயிருந்தன. தற்போது மீண்டும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது 3 இடங்களில் வாரச் சந்தையைத் திறக்க முடிவு செய்யப்பட்டு விட்டது. மின்ட் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகேயும், அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அருகிலும், கோட்டூர்புரத்தில் உள்ள பிரபல வர சித்தி விநாயகர் கோவில் அருகேயும் இந்த வாரச் சந்தைகள் திறக்கப்படவுள்ளன.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இவற்றைத் திறந்து விட வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி தீவிர ஆர்வம் காட்டி வருகிறாராம்.