எம்.ஜி.ஆர். நினைவு கோயிலை அகற்ற தடை கோரியது சென்னை மாநகராட்சி
சென்னை: எம்.ஜி.ஆர். நலம் பெற வேண்டி 27 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பாரிமுனையில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை மாநகராட்சி இடைக்கால தடை கேட்டு மனுத்தாக்கல் செய்தது.
சென்னை பாரிமுனையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் நீதி கருமாரி அம்மன் கோயில் உள்ளது. 1984ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் நலம் பெற வேண்டி பெண் ஒருவர் 27 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலை கட்டினார்.
பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்தக் கோயிலை அகற்ற வேண்டும் என்று கோரி ட்ராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதிகள் கோயிலை அகற்றுவதற்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து நீதி கருமாரி அம்மன் கோயிலின் அறங்காவலர் மேல்முறையீடு செய்தார்.
இம் மனு மீது நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை செய்தது. கோயிலை இடிப்பதற்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து கோயிலை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் திடீரென இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து 2 வார காலத்துக்குள் கோயிலை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.