கார் டயர் வெடித்து விபத்து... சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி- பெண் என்ஜினீயர் படுகாயம்
சென்னை: சென்னை அருகே பைபாஸ் சாலையில் கார் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் பெண் என்ஜினீயர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (29). இவர், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

பிரகாஷுடன் அதே நிறுவனத்தில் கம்யூட்டர் என்ஜீனியராக வேலை பார்த்து வரும் மேகா (29) என்பவரும் அண்ணா நகரில் தான் வசித்து வந்தார்.
இதனால், நேற்று காலை இருவரும் ஒரே காரில் வேலைக்குப் புறப்பட்டனர். காரை மேகா ஓட்டி வந்தார். கார் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, அனகாபுத்தூர் அருகே எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து பஞ்சர் ஆனது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி இடது பக்க சாலை தடுப்பில் மோதி அதே வேகத்தில் வலது பக்கமாக திரும்பி சாலையின் நடு தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் பிரகாஷ், மேகா இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேகா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கார் தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரில் மோதிய போதும், அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications