தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம்... சென்னையில் காலி குடங்களுடன் வீதி வீதியாக அலையும் பரிதாபம்
பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தலைநகர் சென்னையில் அதிகாலையிலேயே காலி குடங்களுடன் மக்கள் வீதி வீதியாக குடிநீரைச் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ள
சென்னை: கடந்த ஆண்டு பருவமழை பொய்துப்போனதால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் தேடி அலைந்து வருகின்றனர். தலைநகர் சென்னையில் தண்ணீர் விநியோகம் சீராக இல்லாத காரணத்தால் அதிகாலை நேரங்களில் தண்ணீரைத் தேடி காலி குடங்களுடன் மக்கள் வீதி வீதியாக அலைந்து வருகின்றனர்.
கடந்த 2015 ஆண்டு பெய்த வரலாறு காணாத பருவமழையால் தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி உபரிநீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு கடலில் கலந்தது.
அதற்கு நேர்மாறாக 2016ஆம் ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பொய்த்துப் போனது. காவிரி நீரும் வரவில்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து போனது. விவசாயமும் பொய்த்துப்போனது. தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது.

காலி குடங்கள்
குடிநீர் பிரச்சினை பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது. அரசியல் பிரச்சினைகள், போராட்டங்கள் ஊடகங்களில் செய்திகளாக குடிநீர் பிரச்சினை பின்தங்கி விட்டது. பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் ஏரிகள்
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துவரும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளின் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீரின் இருப்பு குறைவாகவே உள்ளது. நவம்பர் மாதமே குடிநீர் வாரியம் எச்சரிக்கை மணியடித்து விட்டது.

பூண்டி, சோழவரம் ஏரிகள் நீர்மட்டம்
கடந்த சில தினங்களுக்கு முந்தைய நிலவரப்படி பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கனஅடியில் 789 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஆண்டில் இதே மாதத்தில் தண்ணீரின் கொள்ளளவு 2044 மில்லியன் கனஅடியாக இருந்தது. அதே போன்று, மொத்தம் 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 26 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் 716 மில்லியன் கனஅடி தண்ணீரும், மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 177 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. நான்கு ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11057 மில்லியன் கன அடியில், 1,708.00 கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதாவது 15 சதவிகித தண்ணீர் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

வீராணம் ஏரி
வீரணம் ஏரியின் மொத்த கொள்ள ளவு 47.50 அடி. இந்த ஏரியால் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வரு கின்றன. இந்த ஆண்டு காவிரியில் இருந்து பாசனத்துக்கு மேட்டூர் தண்ணீர் திறக்கப்படவில்லை. வட கிழக்கு பருவமழையும் வஞ்சித்து விட்டது. கடந்த மாதம் வரை தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வறண்டு போனதால் சென்னைக்கு திறந்து விடப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிநீரும் குறைந்த அளவே திறந்து விடப்படுகிறது.

தலைநகரில் பிரச்சினை
சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி மட்டுமல்லாது பல பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் மட்டுமல்லாது நோயாளிகளும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தவித்து வருகின்றனர்.

தவிக்கும் மக்கள்
வீடுகள் தோறும் உள்ள அடிபம்புகளில் தண்ணீர் வராமல் வெற்றும் காற்று மட்டுமே வருகிறது. தாழ்வாக உள்ள பகுதிகளில் எங்கோ ஒரு மூலையில் வரும் தண்ணீரைத் தேடி மக்கள் அதிகாலையிலே காலி குடங்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். வருணபகவான் மனது வைத்து கோடை மழை பெய்தால் மட்டுமே சென்னையில் குடிநீர் பிரச்சினை தீரும், தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் முடிவுக்கும் வரும்.












Click it and Unblock the Notifications