ஒரே ஒரு மழைதான்.. "டோட்டல் சிட்டியே டேமேஜ்".. கோடானு கோடி நன்றி ஆக்கிரமிப்பாளர்களே!
Recommended Video

சென்னை: தமிழகத்து அரசியல் எப்படிப்பட்டது என்பதை அறிய ஆவலாக இருப்பவர்கள் சென்னைக்குள்ளும், சென்னைக்கு வெளியிலும் ஒரு எட்டு போய் விட்டு வந்தால் போதும். அத்தனை கொடூரமாக வைத்திருக்கிறார்கள் நாட்டையும், நாட்டு மக்களையும் இந்த அரசியல்வாதிகள்.. அரசியல்வியாதிகள் என்றும் கூட சொல்லலாம் தப்பே கிடையாது.
மக்களுக்கு எது தேவையோ அதைச் செய்து தருவதில்லை இந்த அரசியல். இதில் பாரபட்சமே இல்லை. எல்லாக் கட்சிகளும் இப்படித்தான். மக்கள் பாதிக்கப்பட்டு கதறும் நேரத்தில் எங்கிருந்தோ வந்து குவிந்து எதையாவது செய்து போட்டோ, வீடியோ எடுத்து விட்டுப் போய் விடுவார்கள். ஆனால் பிரச்சினை.. நிரந்தரமாக இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
2015ம் ஆண்டு அப்படி ஒரு மழை, செம்பரம்பாக்கம் திறந்தது.. சென்னையே மூழ்கிப் போனது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இது செயற்கை பேரிடர் என்றுதான் பலரும் கூறினர். காரணம், நிர்வாகங்களின் செயல் திறனின்மையால் ஏற்பட்ட கவனக்குறைவால் உருவான பேரிடர் இது.

வாழத் தகுதியற்ற நகரம்
பெரு மழைக்காலத்தில் சென்னை நகரம் வாழத் தகுதியற்றதாக மாறி வருகிறது. அந்த அளவுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் படு கேவலமாக உள்ளன. இத்தனைக்கும் இது இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய பெருகநரம். ஆனால் ஒரு மழைக்குக் கூட தாங்குவதில்லை சென்னை.

தொடரும் ஆக்கிரமிப்புகள்
சென்னை நகரில் மழை பெய்தால் நகரம் நாஸ்தியாகிப் போக முக்கியக் காரணம் ஆக்கிரமிப்புகள்தான். கால்வாய், ஏரி, குளம் போன்றவற்றை பாரபட்சமே பார்க்காமல் காலி செய்து விட்டோம். பல ஏரிகள் இன்று ஏரியாக்கள் ஆகி விட்டன. கால்வாய்களைக் காணோம். குளம் குட்டைகளையும் காணோம். பிறகு தண்ணீர் எங்கு போகும், எப்படிப் போகும். மிதக்கத்தானே செய்வோம்.

கட்சிகளின் தான்தோன்றித்தனம்
சென்னை நகரின் துயரத்திற்குக் காரணமான பல ஆக்கிரமிப்புகளுக்கு கட்சிகளே காரணம். பாரபட்சமே இல்லாமல் தங்களுக்கு ஆதரவானவர்களின் ஆக்கிரமிப்புகளை கட்சியினர் ஆதரிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை பாயாத வகையில் அடைகாக்கின்றனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றால் டிரான்ஸ்பர்
2015ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட தாம்பரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்போதைய மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, ஐஏஎஸ் அதிகாரி அமுதா உள்ளிட்டோர் இறங்கினர். அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அரசியல்வியாதிகளின் தொடர் அழுத்தத்தால் அவர்களது பணி பாதியிலேயே நின்று போனது.

ஒரு ஆக்கிரமிப்பும் அகலவில்லை
அப்போது இருந்த ஆக்கிரமிப்புகள் கிட்டத்தட்ட அப்படியேதான் உள்ளன. ஒப்புக்கு சில ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு மக்களை கைகழுவி விட்டனர். இதோ இந்த மழைக்காலத்தில் மக்கள் பரிதவிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு மழைதான் பெய்துள்ளது. அதற்கே இந்த கொடுமை. இன்னும் 2 மாதம் இருக்கிறது. என்ன ஆகப் போகிறதோ தலைநகரம்.

மக்களும் கூடத்தான் குற்றவாளிகள்
அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சாட்டிப் பலனில்லை. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதிலும் தமிழக அரசியல்வாதிகளின் டிசைன் அப்படித்தான். மக்கள்தான் சுதாரிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை மக்களே எதிர்க்க வேண்டும். நமக்கென்ன போச்சு என்ற அலட்சிய மனோபாவத்திலிருந்து மக்கள் வெளியே வந்து நம்மை நாமே காக்க முயல வேண்டும்.. காரணம், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை நல்ல தலைவர்கள் யாரும் தட்டுப்படவில்லை என்பதால்.












Click it and Unblock the Notifications