வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஹைகோர்ட் உத்தரவு
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் இன்னும் சில நிமிடங்களில் விசாரணை செய்யவுள்ளது.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி ஈ. பத்பநாபனை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுமாறு ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்போது பேசிய நீதிபதிகள் பொதுமக்களின் துன்பத்தை யாரும் கணக்கில் கொள்ளவே இல்லை. தொழிலாளர்கள் பிரச்னைக்காகவே தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசுகின்றனர். பேச்சுவார்த்தைக்கு செல்வது அல்லது மறுப்பது தொழிற்சங்கங்களின் விருப்பம் என்று தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை கோரி போக்குவரத்து தொழிலாளர்கள்
கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போதிய அளவிலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதியுறும் நிலை உள்ளதால் ஸ்டிரைக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று 2.44 சதவீதத்தை இடைக்கால ஊதிய உயர்வாக பெற்று கொள்வதாக தொழிற்சங்கங்கள் ஏற்றனர். எனினும் ஜனவரி 4-ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டால் ஸ்டிரைக்கை உடனே வாபஸ் பெறுகிறோம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் சில நிமிடங்களில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இன்றாவது ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுமா என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது.