ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிடில் கூடுதல் அபராதம் விதிக்கும் மத்திய அரசு உத்தரவு ரத்து- ஹைகோர்ட்
ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பிக்கப்படாவிடில் கூடுதல் அபராதம் விதிக்க வகை செய்யும் மத்திய அரசின் விதிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை: ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்கப்படாவிடில் கூடுதல் அபராதம் விதிக்க வகை செய்யும் மத்திய அரசி சட்ட திருத்த விதிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மோட்டர் வாகன அலுவலகத்தில் அதற்கான உரிமங்கள் பெற்று ஓட்டுவது விதிமுறை.
ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கத் தவறினால் ஆண்டுக்கு 50 ரூ மட்டுமே அபராதமாக வசூலித்து வந்தனர். இந்நிலையில் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்காமல் வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்பதால் ஓட்டுநர் உரிமங்களை உரிய காலத்தில் புதுப்பிக்காதவர்களுக்கு கூடுதலாக மாதத்துக்கு ரூ.1000 அபராதம் விதித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனால் ஏழை லாரி டிரைவர்கள் உளளிட்ட வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர் என்றும் உரிமத்தை ஒருநாள் புதுப்பிக்கத் தவறினாலும் ரூ.1000 கூடுதல் அபராதம் செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிடில் கூடுதல் அபராதம் விதிக்கும் மத்திய அரசு உத்தரவு ரத்து- ஹைகோர்ட் pic.twitter.com/BXaZg76It1
— Oneindia Tamil (@thatsTamil) April 4, 2017
இந்த வழக்கானது உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் கொண்ட பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது தமிழக மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் இரு விதிகளை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
அதாவது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்காவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கும் பிரிவு ரத்து; வாகனங்கள் விற்க ஆட்சேபணையில்லாத சான்று அளிப்பதற்கு தாமதம் ஏற்பட்டால் விதிக்கப்படும் அபராதமும் ரத்து என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.