நகைகளில் குறை இருந்தால் விற்பனையாளர்களே பொறுப்பு .. உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை: மக்கள் வாங்கும் தங்க நகைகளில் குறைபாடுகள் இருந்தால் அதற்கு விற்பனையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற இந்தியத் தரக் கட்டுப்பாட்டு துறை தலைமை இயக்குனரின் உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்புத்தூர் தங்க நகைகள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியத் தர அமைப்பின் தலைமை இயக்குனர் வகுத்துள்ள புதியக் கொள்கையின்படி ஹால்மார்க் தங்க நகைகளில் ஏதாவது குறைபாடு இருந்து அது தொடர்பாக புகார் ஏதேனும் எழுந்தால் அதற்கு தங்க நகைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தங்கநகைகளுக்கான பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைகளுக்கான மையங்களை இந்திய தர அமைப்பு பல இடங்களில் அமைத்து அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், பெரும்பாலான மையங்கள் அவ்விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை. அதனால் நகைகள் சுத்தமான ஆபரணத்தங்கம்தான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இதனால் தங்க நகைகளில் குறைபாடுகள் இருந்தால் அதற்கு விற்பனையாளர்கள்தான் காரணம் என்ற உத்தரவை ஏற்க முடியாது என்று அம்மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தங்கநகைகள் மீதான குறைபாடுகளுக்கு, அதை விற்பனை செய்த விற்பனையாளர்கள்தான் பொறுப்பு என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.