வெடிகுண்டு மிரட்டல்… புரளி… கமிஷனர் திரிபாதி எச்சரிக்கை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரட்டை குண்டு வெடித்தை அடுத்து இன்று சென்னை ஆவடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதேபோல தியாகராயநகர் கல்விநிறுவனம் ஒன்றிர்க்கும், வணிகவளாகம் ஆகியவற்றிலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இவை அனைத்தும் புரளி என்று பின்னர் தெரியவந்துள்ளது.
இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மர்ம தொலைபேசி
இன்று காலையில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆவடி ரயில் நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
நிபுணர்கள் சோதனை
இதையடுத்து ஆவடி ரயில் நிலையத்தில் மோப்ப நாய்களுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் திருநின்றவூர், பாக்கம் சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர்.
ஒருமணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை. அது புரளி என தெரியவந்தது.
கல்லூரிக்கும் மிரட்டல்
இதேபோல தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகத்துக்கு தொலைபேசியில் மர்மப் பெண் மிரட்டல் விடுத்ததாகத் தகவல் தெரியவந்தது. தனியார் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
வணிகவளாகத்தில்
இதேபோல சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவாளத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னையில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்களிடம் அச்சம் நிலவி வருகிறது.
கமிஷனர் எச்சரிக்கை
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்று மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இது போன்ற வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மர்மநபர்கள் யார்?
வணிக வளாகத்திலும், ரயில் நிலையம், கல்விநிலையத்திலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்" என்றும் அவர் கூறினார்.