சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் மெட்ரோவுக்கு விரைவில் அனுமதி!
சென்னை: சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவைக்கான முழு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் அனுமதி கிடைக்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜப்பான் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சென்னையில் 2 வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்வதற்காக ஆய்வு நடத்தவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே உள்ள மெட்ரோ ரெயில் நிலைய பணிகள், ரெயில் பாதைப்பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனை பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து கோயம்பேடு-அசோக் நகர் வரை ரெயில் கள் இயக்க அனுமதி அளித்துள்ளார். தொடர்ந்து அசோக் நகர் முதல் ஆலந்தூர் வரையிலான அனுமதியை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்த உடன், பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்கு பின்னர் இம்மாத இறுதியில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 9 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அலுவலக நேரங்களில் அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் ரயில் போக்குவரத்து நடைபெற வாய்ப்பு உள்ளது. சென்னை முழுவதும் 77.5 சதவீதம் சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளது. ஒப்பந்தகாரர்கள் பிரச்சினை தொடர்பாக பூங்கா முதல் சைதாப்பேட்டை வரை ஒரு சில பகுதிகளில் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. விரைவில் இந்த பகுதியில் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவித்தனர்.