பிரதமர் வரும் நேரத்தில் கறுப்பு பலூன் கண்ணில் படக்கூடாது... தேடிப்பிடித்து கீழே இறக்கிய போலீசார்!
பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சார்பில் பறக்க விடப்பட்ட ராட்சத கறுப்பு பலூன்களை போலீசார் தேடிப்பிடித்து அவசரஅவசரமாக கீழே இறக்கினர்.
Recommended Video

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரை கண்டித்து திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியனின் சைதாப்பேட்டை வீட்டிலும், ஆலந்தூர் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் ராட்சத கறுப்புப் பலூன்களை பறக்க விட்டனர். இந்த ராட்சத பலூன்களை போலீசார் அவசர அவசரமாக கீழே இறக்கினர்.
காவிரி வாரியம் அமைக்காத பிரதமர் சென்னையில் இருந்து திரும்பிப் போக வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திரும்பிச் செல்லுங்கள் மோடி என்ற எதிர்ப்புக் குரல் ஓங்க ஒலித்து வருகிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் பிரதமர் காவிரி வாரியத்தில் ஒரு முடிவை அறிவித்துவிட்டு அதன்பிறகு பிரதமர் தமிழகத்திற்கு வரட்டும் என்று எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியனின் வீட்டு மாடியில் ராட்சத கறுப்பு பலூனை திமுகவினர் பறக்கவிட்டனர். அனுமதியின்றி பறக்க விட்ட ராட்சத பலூனை கீழே இறக்கும்படி போலீசார் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் திமுகவினர் மறுப்பு தெரிவித்த நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிரதமர் அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சிக்கு வந்துவிட்டதால் அவசரஅவசரமாக ராட்சத பலூனை கீழே இறக்கினர். இதே போன்று ஆலந்தூர் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பறக்க விடப்பட்ட ராட்சத பலூன்களையும் போலீசார் தேடிப்பிடித்து கீழே இறக்கினர்.












Click it and Unblock the Notifications