வந்திருச்சு வட கிழக்குப் பருவ மழை.. 2015 சென்னை வெள்ளத்தை மறக்கமுடியுமா?
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 2015ஆம் ஆண்டு சென்னை மக்களை தவிக்க விட்ட வெள்ளத்தை நினைவு கூர்வோம்.
சென்னை: சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை வெள்ளத்தை மீண்டும் நினைவு கூர்வோம்.
இந்தியாவில் வடகிழக்கு பருவமழையை பெரிதும் நம்பி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பிற மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யும். ஆனால் தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் சிறிதளவுதான் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் தமிழ்நாட்டில் பெய்யும்.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை சராசரியை விட கூடுதலாகவே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் அளவை அளக்கும் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் 31ம்தேதி வரையாகும். ஆனால் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20தேதி தான் சராசரியாக தொடங்கும். இந்த ஆண்டு அக்டோபர் 28 முதல் தொடங்கி 30 முதல் தீவிரமடைந்துள்ளது.

3 மாவட்டங்களை தவிக்க விட்ட வெள்ளம்
2015ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை நூற்றாண்டுகளில் அளவுக்கு பெய்து சென்னையை மிதக்க விட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட தமிழகம் வெள்ளநீரால் சூழப்பட்டது. நவம்பர் மாதம் தீபாவளிப் பண்டிகை நேரத்தில் கடலூரை சூறையாடிய மழை, நவம்பர் இறுதியிலும், டிசம்பர் ஆரம்பத்திலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தைக் காவு வாங்கியது.

சென்னைவாசிகள் தவிப்பு
சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. கூவம், அடையாற்றில் பெருகிய வெள்ளம், ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசித்த மக்களை அகதிகளாக மாற்றியது.

தவித்த மக்கள்
வடசென்னையில் வசித்தவர்கள் மட்டுமல்லாது சென்னையின் புறநகர்பகுதிகளில் வசித்தவர்களும், தாம்பரம், முடிச்சூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்தவர்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மொட்டைமாடியே வாழ்விடமானது.

குடிநீருக்கு தவிப்பு
டிசம்பர் மாதம் மூன்று நாட்கள் விடாமல் பெய்த கனமழைக்கு ஐடி நிறுவனங்களும் தப்பவில்லை. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வேளச்சேரி வெள்ளச்சேரியாக மாறியது. வீடுகளைச் சுற்றி தண்ணீர் இருந்தாலும் குடி தண்ணீருக்காக பிறரை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது.

உணவு, தண்ணீர் விநியோகம்
சாலைகளில் படகுகள் மீட்புப்படையினர் கொண்டுவந்து கொடுத்த உணவுகள் அமிர்தமானது. பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டதால் பல மாணவர்கள் மீட்பர்களாக செயல்பட்டனர். உணவுகளையும், தண்ணீர் பாட்டில்களையும் கொண்டுபோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தனர். மேடான பகுதிகளில் வசித்தவர்கள் கூடபோக்குவரத்திற்குப் படகுகளை தேடினர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் உடைமைகளை இழந்தனர்.

மீண்டும் ஒரு வெள்ளம் வருமோ
சென்னையில் கடந்த 10 மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் இப்போதே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு வெள்ளம் வருமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த மழை நாளை நினைவில் வைத்துக்கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுறுத்தலாகும்.












Click it and Unblock the Notifications