12 மணி நேரமாக விடாமல் எரியும் தீ.. சென்னை சில்க்ஸ் முழுமையாக இடிக்கப்படுகிறது?
சென்னை: தீவிபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸில் உள்ள கரும்புகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட இக்கடையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்க 12 மணிநேரமாக போராடி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டுள்ளன. இத்தனை நேரமாக தீ எங்கு பிடித்துள்ளது என்று கண்டறிய முடியாததால் தீயை அணைக்க வீரர்கள் திணறினர்.
காலையில் இருந்தே தீப்படித்து வருவதால் தி.நகரே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. கரும்புகையால் கட்டடமே எங்கு உள்ளது என்பது தெரியாத அளவுக்கு உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. மக்களுக்கு மிகப் பெரும் அவதியாக உள்ளது.
முதலில் கட்டடத்தின் சுவர்கள் இடிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் கரும்புகையை கட்டுப்படுத்த முடியாததால் ராட்சத இயந்திரங்கள் மூலம் தளம் தளமாக இடிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே கட்டடம் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இதனால் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தக் கடையில் ரூ. 1000 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசமடைந்துள்ளதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.