ஒரு மழைக்கே தாங்காத சென்னை.. முற்றிலும் ஸ்தம்பித்தது.. ஏரி, குளமாக மாறிய தெருக்கள், சாலைகள்!
சென்னை: ஒரு மழைக்கே தாங்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய் விட்டது சென்னை. குறிப்பாக சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாகியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம் போல கேவலமாக காணப்படுகிறது.
இது தலைநகரமா அல்லது மயிலாப்பூர் கோவில் குளமா என்று கேட்கும் அளவுக்கு பெரும்பாலான பகுதிகள் ஏரிகள், குளங்கள் போல நீர் நிலைகளாக மாறிக் காணப்படுகின்றன.
முக்கியச் சாலைகள் அனைத்திலும் கார்களும் பிற வாகனங்களும் பரிசல்கள், படகுகள்,. கப்பல்கள் போல மிதந்து செல்கின்றன. பஸ்கள் மிதக்கின்றன.
முதல் முறையாக பெரிய மழை
வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய பின்னர் பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்து வந்தது. தற்போதுதான் முதல் முறையாக சென்னை நகரமும், புறநகர்ப் பகுதிகளும் சேர்ந்து நல்லதொரு மழையைக் கண்டுள்ளன.
3 நாட்களாக செம மழை
சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடாது பெய்து வந்த அடை மழையால் நகரமே ஈரத்தில் ஊறிப் போய் விட்டது.
இடைவிடாத மழை
நேற்று முன்தினம் இரவிலிருந்து இடைவிடாது பெய்துவரும் தொடர்மழையால் சென்னை நகரின் பல சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
சூறைக் காற்றுடன் மழை
நேற்றிரவு முதல் சூறைக் காற்றுடன் பேய் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.
தெருக்களை குளமாக்கிய மழை
அயனாவரம், பெரம்பூர், மூலக்கடை, கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல இடங்களில் தெருக்களில் மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது.
ரயில் சேவையைப் பதம் பார்த்த மழை
பல்லாவரம் அருகே ரயில் தண்டவாளத்தின் மீது மரம் விழுந்ததால் இன்று காலை சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் தாம்பரம்-சென்னை கடற்கரை நிலையங்களுக்கு இடையிலான மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளை மூழ்கடித்த மழை
குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், மேடவாக்கம், சேலையூர் உள்பட பல பகுதிகளில் தாழ்வான இடங்கள் அனைத்தும் குளங்களாக மாறிக் காணப்படுகின்றன.
மழை நிவாரண முகாம்கள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டிலும் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் பள்ளிகளிலும் மக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.. கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் தற்காலிக பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆயத்த நிலையில் இல்லை
முறையான கால்வாய் வசதி இல்லாமை, கால்வாய்கள் இருந்தாலும் அதை சரி செய்து ஆயத்த நிலையில் வைத்திருக்காமல் விட்டது, மழை நீர் வடிகால் சரிவர இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் வருடா வருடம் மிதப்பதைப் போல இந்த முறையும் மழையில் மிதந்து கொண்டிருக்கிறது சென்னை.