"ஒரு ரூபாய்க்கு ஒரு டீ"... மோடி வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய டீக்கடைக்காரர்!!
சென்னை: ''டீக்கடைக்காரர் டீக்கடைக்காரர்'' என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் செய்த கிண்டல் இன்று மிகப் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஒரு காலத்தில் டீ விற்றவரான நரேந்திர மோடி இன்று நாட்டின் பிரதமராகியிருப்பதைக் கொண்டாடும் வகையில் சென்னையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவர் இன்று முழுவதும் தனது டீக்கடையில் ஒரு டீ ரூ 1க்கு விற்று அதிசயிக்க வைத்துள்ளார்.
ஒரு காலத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து ரயில் நிலையத்தில் டீ விற்றவர் நரேந்திர மோடி. இதை காங்கிரஸார் கிண்டலடிக்கப் போய் நாடு முழுவதும் டீக்கடைக்காரர்கள் கடுப்பாகி பாஜகவுக்கு ஆதரவாக மாறி விட்டனர்.
இன்று பத்து டீக்கடைகளை எடுத்தால் அதில் பாதிப் பேர் மோடி ஆதரவாளர்களாக மாறி நிற்கின்றனர். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த கலியமூர்த்தி என்ற டீக்கடைக்காரர் மோடியின் வெற்றியைக் கொண்டாட தனது கடையில் இன்று முழுவதும் ஒரு டீயை ஒரு ரூபாய்க்கு விற்று அசத்தியுள்ளார்.
சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பச்சையப்பன் நகரில் டீக் கடை வைத்துள்ளார் கலியமூர்த்தி. இன்று அவரது கடையில் ஒரு டீ ரூ 1தான். மோடி வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த ஆஃபராம். இதுகுறித்து போர்டும் வைத்திருந்தார்.
இதுதொடர்பாக கலியமூர்த்தி கூறுகையில், நான் பாஜாகவில் இருக்கிறேன். எங்களை பெருமைப்படுத்தியவர் மோடி. அவர் பிரதமராகி இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. எனவே இன்று முழுவதும் 1 ரூபாய்க்கு டீ விற்கிறேன்.
வழக்கமாக எனது கடையில் டீ விலை ரூ.7 ஆகும். தினமும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் டீ விற்பனையாகும். இலவசமாக கொடுத்தால் நன்றாக இருக்காது. எனவே 1 ரூபாய்க்கு விற்கிறேன். இந்த நாளை மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றார்.