செட்டிநாடு சிமெண்ட் குழும இயக்குநராக எம்.ஏ.எம். ராமசாமி நீடிக்க பொதுக்குழுவில் எதிர்ப்பு!
சென்னை: செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி நீடிக்கக் கூடாது என்ற தீர்மானத்துக்கு அந்நிறுவன பொதுக்குழு ஆதரவளித்துள்ளது.
சென்னையில் இன்று செட்டிநாடு குழுமத்தின் 51வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எல். முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில் தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியை இயக்குநராக மீண்டும் நியமனம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் பின்னர் நிறுவனத்தின் தணிக்கையாளர்களை மாற்றிவிட்டு புதிய தணிக்கையாளர்களை நியமிப்பது உள்ளிட்ட சில முடிவுகளும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
முன்னதாக இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை செல்லாது என அறிவிக்கக் கோரிதான் கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழனுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
ராமசாமியிடமிருந்து 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மனுநீதிச் சோழன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சென்னை பட்டினப்பாக்கம் மற்றும் திருவான்மியூர் காவல்நிலையங்களில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எம்.ஏ.எம்.ராமசாமி கொடுத்த புகார் திடீரென இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.