காஷ்மீருக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்காவிட்டால் பெரிய விலை கொடுக்க வேண்டும்... ப.சி. எச்சரிக்கை
சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்காவிட்டால் நாம் மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக ராணுவத்துக்கு எதிராக வன்முறைகள் நீடித்து வருகின்றன. இதுவரையிலான மோதல்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்; ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரிந்து தனிநாடாவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு, பொதுவாக்கெடுப்பு நடத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
அதிகபட்ச சுயாட்சி
இதனிடையே ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வாக அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும் என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சியும் கூட தவறாகத்தான் கையாண்டது. ஆனால் 2010-ல் காங்கிரஸ் கட்சியில் தவறுகள் திருத்தி கொள்ளப்பட்டுவிட்டன.
தனித்துவ அரசியல் அமைப்பு தேவை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு என தனித்துவமான ஒரு அரசியல் அமைப்பு முறை தேவைப்படுகிறது. தற்போதைய மத்திய அரசும் மாநில அரசும் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தவறாக கையாள்கின்றன. ஜம்மு காஷ்மீர் முதல்வரான முப்தி முகமது சயீத் மிகப் பெரிய தவறு செய்து வருகிறார்.
ராணுவத்தினரை விலக்கினோம்....
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டோம். நான் உள்துறை அமைச்சராக இருந்த போது 10,000 ராணுவத்தினர் காஷ்மீரில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர். இதற்கு அப்போது ராணுவத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது.
திருத்தம் அவசியம்...
ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் சட்டத்தில் கண்டிப்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான பரிந்துரைகளை நாங்கள் முன்வைத்த போதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.