சீனா- ஜப்பான் உதவியுடன் போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்!
சென்னை: சீன தற்காப்புக் கலையை உருவாக்கியவரும் மிகப் பெரிய மருத்து நிபுணருமான போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் நினைவிடம் அமைக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சீனா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
போதி தர்மர்
தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னர் வாரிசாகப் பிறந்தவர் போதி தர்மர். பல்லவ இளவரசனாக இருந்தாலும் காஞ்சி மாநகரில் தற்காப்புக் கலை, மருத்துவத்தில் நிபுணராகத் திகழ்ந்தார்.
சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பணயம் செய்து இறுதியாக சீனா சென்றார். சீன மக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த கொள்ளை நோயை தன் மருத்துவத் திறனால் ஒழித்ததாக வரலாறு சொல்கிறது.
புத்த மதத் தலைவர்
சீன பாரம்பரிய வரலாற்றில் புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட சான் புத்த மதத்தின் முதல் தலைவராகவும், மகாயண புத்த மதத்தின் 28வது தலைவராகவும் இருந்துள்ளார் போதி தர்மர்.
தாமோ.. காங்-சி
கி.பி 6-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்த சீனத் துறவியும், சுற்றுப் பயணியுமான யீ ஜங் எழுதியுள்ள குறிப்புகளில் "தாமோ" தென்னிந்திய நகரமான காங்-சியிருந்து (காஞ்சி) சீனாவுக்கு வந்தபோது அவர் போதி தர்மர் என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் அங்கு மகாயண புத்த மதத்தை பரப்பியதாகவும் கூறியுள்ளார்.
சீனாவின் ஹெனன் மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் "குங்பூ" என்ற தற்காப்பு கலையை அவர் பயிற்றுவித்து வந்ததாகவும், ஜங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டவர் புகழாரம்
தமிழ் மண்ணிலிருந்து சென்ற இத்துறவி தனது போதனைகளின் மூலம் சீன, ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார். சீனாவில் பல இடங்களில் தமிழ் மொழியில் கல்வெட்டுகள் இருப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது. போதி தர்மனின் வரலாற்றை சீனா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தெரிந்துள்ளனர், புகழ்ந்து வருகின்றனர்.
ஏழாம் அறிவு
ஆனால் இந்தியாவில் அவரைப் பற்றி தெரிய வந்ததே ஏ ஆர் முருகதாஸ் எடுத்த ஏழாம் அறிவு படம் மூலம்தான். அந்தப் படத்தில் போதி தர்மரா வாழ்ந்திருந்தார் நடிகர் சூர்யா. அந்தப் படத்துக்குப் பிறகு போதி தர்மன் குறித்து அறியும் ஆர்வம் தமிழ் மக்களிடம் அதிகரித்தது.
நினைவிடம்
இப்போது போதி தர்மன் அவதரித்த காஞ்சி நகரில் அவருக்கு பெரிய நினைவிடம் அமைக்க சீன, ஜப்பான் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.
சீனத்துறவியும், ஷோலின் கோயிலின் நிர்வாக இயக்குனருமான ஷி யான் லின் தலைமையில் ஒரு குழு சில தினங்களுக்கு முன் காஞ்சி நகருக்கு வந்தது. அப்போது சீனா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் நிதியுதவியின் மூலம் போதி தர்மருக்கு நினைவிடம் அமைக்க முயன்று வரும் சென்னையை சேர்ந்த பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான ஜான் சாமுவேலுடன் ஷி யான் லின் ஆலோசனை நடத்தினார்.
2 ஏக்கரில்
2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இத்திட்டம் முடிவடைந்தால் உலகத்தரம் வாய்ந்த புத்த மத தத்துவ மையமாக இது உருவெடுக்கும் என ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து போதி தர்மன் சிலை
இந்த நினைவிடத்தில் சீனாவின் சோங்ஷான் மலையில் 9 வருடங்கள் தியானம் செய்த போதி தர்மருக்கு அந்த மலையிலிருந்து செதுக்கப்பட்ட அவரது திருவுருவ சிலையை நிறுவப்போவதாக லின் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிலிருந்து நினைவுத் தூண்
ஜப்பானிலிந்து இங்கு வந்து இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் டோக்கியோ பல்கலைக்கழக விரிவுரையாளர் ட்சுட்டோம்பு காம்பே தலைமையிலான குழுவினர் ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் ஒன்றை இங்கு நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்காப்பு கலை
ஷோலின் கோயிலில் போதி தர்மர் பயிற்றுவித்த சீன தற்காப்புக் கலை, குங்பூ மற்றும் தியான வகுப்புகள் இம்மையத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.