கிறிஸ்துமஸ் விழா தமிழகத்தில் கோலாகலம்- தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை: இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன
புகழ்பெற்ற சென்னை சாந்தோம் பேராலயத்தில் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதேபோல் பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தேவாலயங்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மாட்டுத் தொழுவத்தில் ஏசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு முதலே தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திலும் அனைத்து தேவாலயங்களிலும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. திருச்சி சகாய மாதா பேராலயம், மதுரை புனித மரியன்னை தேவாலயம், பாஸ்டின் நகர் தூயபவுல் ஆலயம், நெல்லை, கோவை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறி உறவினர்கள், நண்பர்களுக்கு கேக், சாக்லேட், பரிசுகளை கொடுத்து மகிழ்ந்தனர்.
பெங்களூருவில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்துவ பாதிரியார்கள் வேதவாசகங்களை வாசிக்க, பொதுமக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை வழிபட்டனர். குழந்தை இயேசுவின் உருவ பொம்மையை பாதிரியார்கள் கையில் ஏந்தி, தேவலாயம் முழுவதும் வலம் வந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தின பாடல்களை தேவாலயங்களில் பாடி மகிழ்ந்தனர். நள்ளிரவு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.