சூப்பர் ஸ்டார் கூப்பிட்டாக.. இளைய தளபதி கூப்பிட்டாக.. ஆனா, பாஜகவுக்கு ஓட்டு மட்டும் கிடைக்கலை!
சென்னை: தமிழகத்தில் நடிகர்களுக்காக வாக்களிக்கும் தலைமுறை மலையேறிவிட்டதை தேர்தல் முடிவு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
திமுக-தமாகா
1996ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று தமிழக காங்கிரசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதை மீறி அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார்.இதை தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்த முன்னணி தலைவர்கள் எதிர்த்தனர். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.
ஒருமுறை சொன்னா..
அதிமுக-காங்கிரஸ் ஓரணியாகவும், திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் ஓரணியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலின்போது தொலைக்காட்சியில் தோன்றிய ரஜினிகாந்த், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றார். முதன்முதலாக அரசியல் குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் திமுக 167 சட்டசபை தொகுதிகளையும், தமிழ் மாநில காங்கிரஸ் 39 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றன. அதிமுகவுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பர்கூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தோல்வியடைந்தார்.
வரும்.. ஆனா.. வராது
இந்த வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. இதுவரை அது அடங்கவேயில்லை. ரஜினிகாந்தோ வரும்.. ஆனா வராது.. என்ற பாணியில் கூறி மக்களை குழப்பி வந்தார். அண்ணாத்துரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என திரைத்துரை சார்ந்தவர்களே தமிழக அரசியலில் கோலோச்சியதால் தமிழக மக்கள் சினிமாத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவோருக்கு ரத்தன கம்பளம் விரிப்பார்கள் என்ற பேச்சு நாடு முழுவதும் பரவியது.
நாங்க கேட்கமாட்டோம்
சரத்குமார், விஜயகாந்த் என சமீபகாலத்திலும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள் சிலரும் உள்ளனர். இதனால் சினிமாவுக்கும், தமிழக அரசியலுக்கும் நடுவே எப்போதும் ஒருபிரிக்க முடியாத பந்தம் தொடர்ந்து வருகிறது. ஆனால், நடிகர்களை பார்த்தும், அவர்கள் சொல்வதை கேட்டும் மக்கள் வாக்களிக்க இப்போதல்லாம் தயாரில்லை.
பார்க்க வேண்ணா வருவோம்
வைகைப்புயல் வடிவேலுவுக்கு கூடாத கூட்டமா கடந்த சட்டசபை தேர்தலில். ஆர்ப்பரித்து மக்கள் கைதட்டி ரசித்தனர் அவரது பேச்சை. ஆனால் அவர் ஆதரித்து பேசிய திமுகவோ எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெறமுடியவில்லை. ஒரு காலத்தில் கோயில் கட்டி கொண்டாடப்பட்ட குஷ்பு சொல்லியுமே மக்கள் திமுகவுக்கு ஓட்டுப் போடவில்லை.
தேர்தலிலே புஸ்வாணம்
ரஜினி வாய்சுக்காக பல கட்சிகளும் ஏங்கிக்கிடந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிசயமாய் அவரும் வாய் திறந்தார். நான் பாஜகவுக்குத்தான் வாக்களித்துள்ளேன் என்று கூறினார். ஆனால் நிலைமை என்ன, பாஜகவுக்கு படுதோல்வியே பரிசாக கிடைத்தது.
போட்டோதான் மிச்சம்
ஆயினும் ரஜினி மீது மக்களுக்கு கிரேஸ் இருப்பதாக நினைத்த பாஜக தலைவர்கள் மோடியுடன் அவரை சந்திக்க ஏற்பாடு செய்தனர். மோடியும் ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று சந்திப்பு நடத்தினார். அனைத்து ஊடகங்களிலும் இருவரும் இருக்கும் படங்கள் வெளியாகின. கடந்த தேர்தலில் அதிமுக அணி வெற்றிக்கு அணில் போல உதவியதாக கூறிய விஜயை சந்தித்தால் இளம் வாக்காளர்களை கவரலாம். பாஜகவுக்கும் அணில்போல அது உதவும் என்று நினைத்த மோடி, கோவையில் விஜயையும் சந்தித்தார்.
சாதிச்சிட்டோமய்யா..
ஒரு பக்கம் எவர்கிரீன் ரஜினி, மறுபக்கம், மாஸ் ஹீரோ என சொல்லிக்கொள்ளும் விஜய் என இருவரையும் வளைத்துப்போட்ட சந்தோஷம் மோடி முகத்தில். டுவிட்டரில் சேர்ந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான பாலோவர்கள் ரஜினிக்கு கிடைத்தனர் என்ற செய்தியும் இன்பத் தேனை மோடி காதில் பாய்ச்சியது.
போஸ் இப்போ டோஸ்..
ஆனால் தமிழகத்து தேர்தல் முடிவுகள் தலைகீழாக உள்ளன. அம்மா முன்னாடி மற்றவங்க எல்லாம் சும்மா என்பதுபோல மக்கள் ஓட்டுபோட்டுள்ளனர். "என்னப்பா ஏதோ சூப்பர் ஸ்டார், இளையதளபதி என அடைமொழியெல்லாம் சொல்லி நம்மள போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்னீங்களே.. இப்போ என்ன ஆச்சு" என தமிழக பாஜகவினர் மோடியிடம் டோஸ் வாங்காமல் இருந்தால் சரி.