வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி.. திருச்சி தம்பதி உள்ளிட்ட 4 பேர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
திருச்சி: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் கோவிந்தராஜ். 28 வயதான இவர் ஒரு பட்டதாரி. வேலைக்காக அலைந்து திரிந்துள்ளார். அப்போது, திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார்கோவில் தெருவை சேர்ந்த ராகேஷ்சர்மா என்பவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக இவருக்கு தகவல் கிடைத்தது.
பணம் தேவை
எனவே வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆர்வத்தில் திருச்சி வந்த கோவிந்தராஜ், ராகேஷ்சர்மாவை சந்திந்து, எப்படியாவது வெளிநாடு செல்ல வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதனை கேட்ட ராகேஷ்சர்மா, கத்தார் நாட்டில் வேலை இருக்கிறது, ஆனால் அங்கு போக, பாஸ்போர்ட், விசா எடுக்க வேண்டும் என்றும், அதற்காக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
விசா, பாஸ்போட் இல்லை
வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட கோவிந்தராஜ், ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் மூலமாக ராகேஷ்சர்மாவுக்கு பணத்தை சிறு சிறு தவணைகளாக 20.9.2016 முதல் 10.7.2018 வரை ரூ.10 லட்சத்து 24 ஆயிரம் பணம் தந்தார். ஆனாலும், ராகேஷ்சர்மா பாஸ்போர்ட், விசா எடுத்து தரவில்லை, அதற்கான முயற்சி கூட எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கோர்ட்டில் வழக்கு
அதனால் ராகேஷ் சர்மாவை சந்தித்த கோவிந்தராஜ், "வேலையே வேண்டாம், என் பணத்தை திருப்பி கொடு" என்று கேட்டுள்ளார். ஆனால் ராகேஷ் ஷர்மா பணம் தர மாட்டேன் என்று கூறி தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கோவிந்தராஜுக்கு கொலை மரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ், இது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் கோவிந்தராஜ் வழக்கு தொடர்ந்தார்.
4 பேர் கைது
அதை விசாரித்த நீதிபதி, திருச்சி மாநகர போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி ராகேஷ்சர்மா, அவரது மனைவி சங்கீதா, உறவினர்கள் கருப்பண்ணன், மனோகரன் ஆகிய 4 பேர் மீது மோசடி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.