25 வருட பழமையான ஆவணங்களை அம்பலமாக்குவது கட்டாயம்.. ஏட்டளவில்தான் இந்திய சட்டம்!
சென்னை: நாட்டின் முக்கியமான ஆவணங்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்கிறது இந்திய சட்டம். ஆனால் நடைமுறை அப்படியில்லை என்பதற்கு உதாரணம்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய ஆவணங்களின் காலதாமதம் என்று குற்றம்சாட்டுகிறார்கள் ஆய்வாளர்கள்.
நாட்டு ஆவணங்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்ட நெறிமுறை உள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த ஒரு பெரிய நாடும் மாறுபடவில்லை.
அமெரிக்க சட்டம்
அமெரிக்க ஐக்கிய நாடுகளில், 25 வருடங்கள் பழமையான கோப்புகள், தானாகவே, மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவிடும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி, 25 வருடங்கள் பழமையான ஆவணங்கள் மீதான தடைகள் தானாக தளர்ந்துவிடும்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
இங்கிலாந்து நாட்டில், 30 வருடங்கள் பழமையான கோப்புகள், மக்கள் பார்வைக்கு வரும். 20 வருடங்கள் ஆனதுமே, பொது ஆவண காப்பக அலுவலகத்திற்கு அந்த கோப்புகள் அனுப்பி வைக்கப்படும். ஆஸ்திரேலியாவை பொறுத்தளவிலும் 30 வருடங்கள்தான் கெடு. தென் ஆப்பிரிக்காவில் 20 ஆண்டுகள் மட்டுமே.
சட்டம் உள்ளது
இந்தியாவை பொறுத்தளவில், ஆவணங்களை மக்கள் பார்வைக்கு கொண்டுவருவதை 1997ம் ஆண்டின், தி பப்ளிக் ரெக்கார்ட்ஸ் ரூல்ஸ் என்ற சட்டம் ஒழுங்குபடுத்துகிறது. அந்த சட்டத்தின்படி, 25 வருடம் பழமையான ஆவணங்கள், தேசிய ஆவண காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால் நேதாஜி கோப்புகள் விவகாரத்தில் இந்த சட்டம் பின்பற்றப்படவில்லை.
பாதுகாப்பு
இந்த சட்டப்படி, பதிவு செய்யப்படாத 25 ஆண்டு பழமையான ஆவணங்கள் அழிக்கப்பட கூடாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே அந்த ஆவணங்கள் வெளியிடப்பட கூடாது. மேலும், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலுமே தேசப்பாதுகாப்பு என்று வந்தால், அந்த ஆவணங்களை வெளியிட கூடாது என்பதில் சட்டம் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.
எழுத்தாளர்கள் ஆதங்கம்
எழுத்தாளர்கள், ஆய்வாளர்களான அனுஜ் தார் போன்றோர் கூறுகையில், "இந்தியாவில், ஆவணங்களை வெளிப்படுத்துதல் குறித்த சட்டம் ஏட்டளவில் உள்ளதே தவிர, செயல்பாட்டுக்கு வரவில்லை. மேலும், பிரதமர் அலுவலகம் பாதுகாக்கும் ஒரு ஆவணத்தை, இந்த சட்டம் கட்டுப்படுத்தாதது. இது அரசுகளுக்கு வசதியாகிவிட்டது" என்கிறார்கள்.