மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் ஈபிஎஸ் தீவிர முயற்சி: தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மெஜாரிட்டி பலம் குறைந்தது. இதற்காகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு குழுக்களாக பிளவுபட்ட அதிமுக நீண்ட இழுபறி போராட்டத்துக்குப் பிறகு, அண்மையில் ஒன்றாகச் சேர்ந்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் நீடிக்க, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
அதே போல அதிமுகவை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இது அதிமுகவின் இன்னொரு கட்டம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்று கூறி வந்த டி.டி.வி.தினகரன் தற்போது இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்.
19 எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கவர்னருக்கு அனைத்துக்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
113 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு
தினகரன் அணிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் சென்று விட்ட நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. அதிலும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் உரிய நேரத்தில் ஒன்றாக முடிவு எடுப்போம் என்று அறிவித்துள்ளனர். அவர்கள் ஆதரவு யாருக்கு என்று தெரியாத நிலையில் 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே இப்போதைக்குத் தெளிவாக உள்ளது.
117 எம்எல்ஏக்கள் தேவை
பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமானால் 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எனவே, அரசுக்கு மெஜாரிட்டி ஆதரவைப் பெறுவதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
புதுச்சேரி சொகுசு விடுதி
டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேல் தவிர மற்ற 18 பேரையும் கூவத்தூர் போலப் புதுவையில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார். அவர்களை யாரும் சந்திக்க முடியாதபடி சொகுசு விடுதியில் தினகரன் ஆட்கள் காவல் காத்து வருகிறார்கள். விடுதிக்குள் மற்றவர்கள் நுழைய முடியாதபடி விடுதியின் கேட் இழுத்து மூடப்பட்டுள்ளது.
ஆட்சி கவிழ்ப்பை விரும்பவில்லை
புதுவை விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களில் பலர் அரசு கவிழ்வதை விரும்பவில்லை என்று கூறுகின்றனர். மேலும், ஆட்சி கவிழ நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சசிகலாவை நீக்கக் கூடாது
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கும் முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காக நெருக்கடி கொடுப்பதற்காகவே இவ்வாறு எம்.எல்.ஏ.க்களை தினகரன் தனியாக பிரித்து வைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
சமாதான முயற்சியில் அமைச்சர்கள்
இதையடுத்து எம்.எல்.ஏ.க்களை சமரசப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் 2 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அரசைக் கவிழ்க்க விரும்பாத மனநிலையில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.
ஈபிஎஸ் அணிக்கு இழுக்கும் முயற்சி
நேற்று முன்தினம் இரவு தினகரனை மூத்த அமைச்சர்கள் 2 பேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் உடன்பாடு ஏற்படாததால் எம்.எல்.ஏ.க்களை சமரசப்படுத்தி அரசுக்கு ஆதரவாக இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.