ரஜினிக்கு நோஸ் கட்டா? "காலி இடம்லாம் இல்ல, வேறு மாநிலத்த பாருங்க.."- எடப்பாடி பழனிச்சாமி பொளேர்
மதுரை: தமிழகத்தில் அரசியலில் காலி இடம் இல்லை என்றும், அவ்வாறு கூறுவோர் வேறு மாநிலத்தை பார்க்கலாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த்தை மறைமுகமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து பேசினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஜெயலலிதா பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக 120 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று மதுரையில் நடைபெற்றது.
இதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

திமுக மீது தாக்கு
ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால்தான் காவிரி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியானது. 2007ம் ஆண்டு நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நினைத்திருந்தால் அரசிதழில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் சிந்தித்ததெல்லாம் குடும்பத்தை பற்றிதான். எந்த இலாகாவை பெறலாம் எனதான் யோசித்துக்கொண்டிருந்தனர்.

உண்ணாவிரதம்
வரும், ஏப்ரல் 2ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காவிரிக்காக அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வை அதில் வெளிப்படுத்துவோம்.

வேறு மாநிலத்தை பார்க்கலாம்
இன்று சிலர் புதிது புதிதாக புறப்பட்டுள்ளனர். காலி இடத்தை நிரப்பப்போகிறோம் என்று. எங்கய்யா காலி இடம் இருக்கிறது. எல்லாம் ஃபுல்லாகிவிட்டது. வேறு மாநிலத்தை வேணும்னா போய் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இடமில்லை. நான் 1974ல் அதிமுக கழகத்தில் இணைந்தேன். கிளை கழக செயலாளராக பதவியேற்றேன். படிப்படியாக உயர்ந்து இந்த இடத்திற்கு வந்தேன்.

உழைத்து முன்னுக்கு வந்தோம்
நமது துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவின் பல நிர்வாகிகள், நாட்டு மக்களிடம் நேரடியாக சென்று பல வருடங்களாக மக்களுக்காக உழைத்துள்ளார்கள். மக்கள் செல்வாக்குடன் உள்ளவர்கள் இவர்கள். எனவே, இங்கு காலி இடம் கிடையாது. ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. வேறு எந்த கட்சியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் கிடையாது. இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியும் அதிமுகதான். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

ரஜினிகாந்த்துக்கு நோஸ் கட்
தமிழக அரசியலில், காலியிடம் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். காலியிடத்தை நிரப்ப நான் அரசியலுக்கு வருகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், காலியிடம் இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நடந்த ஈரோடு மண்டல மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்தார். இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அவ்வாறே கூறியுள்ளார். மேலும், வேறு மாநிலத்தை வேணும்னா போய் பார்க்கலாம் என்று கூறியதன் மூலம், மறைமுகமாக ரஜினிகாந்த்தை கன்னடர் என முதல்வர் குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications