ஜனாதிபதி தேர்தல்.. தலைமைச் செயலகத்தில் எம்பிக்களுடன் முதல்வர் ஆலோசனை.. ஓபிஎஸ் அணியினரும் பங்கேற்பு
அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால், அதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஓபிஎஸ் அணி எம்பிக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் ஓபிஎஸ் அணி எம்பிக்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போதுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், வரும் 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்துவை ஆதரிப்பது என அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்பிக்களும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.