தமிழக சட்டசபை: 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகள் வெளியிட்ட ஜெ.,: கின்னஸ் சாதனையாம்!
சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில், நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர்களில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, 181 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கின்னஸ் சாதனை என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், செவ்வாய்கிழமையுடன் நிறைவு பெற்றது. முக்கியமாக பிரதான எதிர்கட்சியான தேமுதிக எம்.எல்.ஏக்கள் யாருமே சட்டசபைக்குள் நுழையமுடியாமல் போனது. சபைக்குள் வந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது வெளிநடப்பு செய்தனர். சில நேரங்களில் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, 181 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மானிய கோரிக்கை விவாதம்
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் மானிய கோரிக்கைகைள் மீதான விவாதம் தொடர்பான சட்டசபைக் கூட்டம் ஆகஸ்ட் 24 ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடர் 19 நாட்கள் நடைபெறும் என்று சட்டசபைக் தலைவர் தனபால் அறிவித்தார். அதன்படி துவக்க நாளில், அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
110 விதி அறிவிப்புகள்
அதன் பின்னர் 25ம் தேதி முதல் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது விதி எண் 110ன் கீழ் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று பொதுத்துறை, நிதித்துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
14 சட்டசபையின் 10 வது கூட்டத்தொடர்
சட்டசபைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த உடன் சட்டசபையில் பேசிய சபாநாயகர் தனபால், பதினான்காவது சட்டசபையின், 10வது கூட்டத் தொடரின் முதல் கூட்டம், பிப்ரவரி, 17ல் துவங்கி, 23 வரை நடந்தது. இரண்டாவது கூட்டம், மார்ச், 23 - ஏப்ரல் 1 வரை நடைபெற்றது. மூன்றாவது கூட்டம், ஆகஸ்ட் முதல் 24 - செப்டம்பர் 29 வரை நடந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி
ஆளுநர் உரை உட்பட, 29 நாட்கள் சட்டசபை கூடியது. மொத்தம், 157 மணி நேரம், 21 நிமிடம் விவாதம் நடந்துள்ளது. சபையில், அதிக அளவில், 24 வினாக்களுக்கு பதில் அளித்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலிடம் பெற்றுள்ளார்.
கவன ஈர்ப்பு தீர்மானங்கள்
உறுப்பினர்களிடம் இருந்து, 940 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் வரப்பெற்றன. இதில், 499 அனுமதிக்கப்பட்டன; 15க்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இவற்றில், மூன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.
181 அறிவிப்புகள்
கடந்த ஆண்டு வரை, அனைத்து அரசு துறை சம்பந்தமாக, முதல்வர், 150 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த ஆண்டு, 31 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்மூலம், நான்கு ஆண்டுகளில், 110வது விதியின் கீழ், 181 அறிவிப்புகளை வெளியிட்டு, முதல்வர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.