நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிப்பு.. மத்திய அரசுக்கு நாராயணசாமி கண்டனம்
புதுவை: நீட் தேர்வினால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், இந்திய அரசியலமைப்பு விதிகளை மீறி மாநில அரசுகளின் கல்வி முறைகளில் நேரடியாக மத்திய அரசு தலையிடுகிறது.
நீட் தேர்வினால் மருத்துவம் பயில கனவு காணும் ஏராளமான கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன்.
கடந்த காலங்களில் மாணவர்களை சென்டாக் முறையில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது போல் தற்போதும் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு
புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளேன். ஆனால் அதற்கு மத்திய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
முழுமையாக பாதிக்கப்படுபவர்கள் புதுவை மாநில மாணவர்கள்தான். மத்திய பாடத்திட்டத்தின் கீழ் மாநிலங்கள் வர வேண்டும் என்றால் இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். ஆகவே, தமிழக, புதுவை மாநில மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இரு மாநிலங்களுக்கும் கடந்த ஆண்டை போல் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.