'இரங்கலுக்குச் சென்றால் இதுதான் நடக்கும்!'... அமைச்சர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி
சசிகலா கணவர் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்த யாரும் செல்ல வேண்டியதில்லை என்று முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
Recommended Video
சென்னை : சசிகலா கணவர் நடராஜன் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள் செல்லாதது குறித்து விமர்சிக்கப்படுகிறது. ' அமைச்சர்கள் சென்றால் அந்தக் குடும்பம் எதுபோன்ற பிரசாரத்தை மேற்கொள்ளும் என அனைவருக்கும் தெரியும் நாம் செல்ல வேண்டியதில்லை' எனப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை, சோளிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி மரணம் அடைந்தார் நடராஜன். அவரது மரணத்துக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். கணவரின் மரணத்தையொட்டி 15 நாள் பரோலில் வந்திருக்கிறார் சசிகலா.
நடராஜனின் உடல் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க தரப்பில் இருந்து அஞ்சலி செலுத்த வராதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ' ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தின் நிகழ்வுகளு்கு நாங்கள் எப்படி செல்ல முடியும்? ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதால் நடராஜனுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தவில்லை' என்றார்.
சீமான் வருத்தம்
இதுகுறித்து தஞ்சையில் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ' சசிகலாவின் பரோலுக்காக ஒரு அ.தி.மு.க எம்.பிகூட கையெழுத்து போடாதது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பண்பாடற்ற அரசியல் நடக்கிறது. பதவிக்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களது நடவடிக்கை, மரணத்தை விட மிகப் பெரிய வலியை ஏற்படுத்தியுள்ளது' என்றார் கொதிப்புடன்.
முதல்வர் சொன்ன அட்வைஸ்
இந்நிலையில், நடராஜனுக்கு இரங்கல் தெரிவிக்க தென்மாவட்டத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவர்களிடம் பேசிய முதல்வர், ' நடராஜன் இரங்கலுக்குச் செல்ல வேண்டாம். அரசியல் நாகரிகம் கருதி, நாம் சென்றால் அந்தக் கூட்டம் என்ன செய்யும் என்பதும் நமக்குத் தெரியும். உங்களைப் பார்த்துவிட்டாலே, ' அண்ணா தி.மு.க மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது; ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்' என மீண்டும் பேசத் தொடங்குவார்கள்.
18 தொகுதிக்கும் இடைத்தேர்தல்
நீங்கள் அஞ்சலி செலுத்த செல்வதால் தேவையற்ற விவாதங்கள் ஏற்படும். அதற்கு நாம் இடம் கொடுத்துவிட வேண்டாம்' என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசும்போது, ' இப்போது கட்சி நம்மிடம் வந்துவிட்டது. இந்த ஆட்சிக்கு எதுவும் நடந்துவிடாது. 18 பேர் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை சரிதான் எனத் தீர்ப்பு வரும் என நம்புகிறோம். 18 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தலை வைத்துக் கொள்ளலாம். அதை நாம்தான் முடிவு செய்வோம். அதைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
செல்வாக்கை வளர்த்துக் கொள்ளுங்கள்
தினகரனிடம் இப்போது ஐந்து எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களும் நம்மிடம் வந்துவிடுவார்கள். இரங்கலுக்குப் போகாதது பற்றி மற்றவர்கள் பேசுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்'. ' உங்கள் ஊரில் அரசியல் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். அமைச்சர் ராமநாதபுரம் மணிகண்டன் போலச் செயல்படுங்கள். உங்கள் ஊரில் உங்களுடைய தனிப்பட்ட செல்வாக்குக்குத்தான் சசிகலா குடும்பம் வேட்டு வைக்கிறது.
இரங்கலில் பங்கேற்ற மாவட்டங்கள் எவை?
இரங்கலுக்குச் சென்ற வாகனங்களில் பெரும்பாலானவை புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்துதான் சென்றுள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து 20 சதவீத வண்டிகள்தான் சென்றுள்ளன. எனவே, உள்ளூரில் செல்வாக்கை வளர்த்துக் கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது' எனப் பேசியிருக்கிறார்.
உளவுத்துறை தீவிரம்
"எடப்பாடி பழனிசாமியின் விளக்கத்தால், அமைச்சர்கள் திருப்தியடைந்துவிட்டனர். இதன் விளைவாகவே, நடராஜன் இரங்கல் கூட்டத்தில் அவர்கள் தலைகாட்டவில்லை. அஞ்சலிக்கு வருகிறவர்கள் யார் என்பதைக் குறிப்பெடுக்கும் பணிகளில் உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது" என்கின்றன அமைச்சர்கள் வட்டாரங்கள்.