முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேனர் கிழிப்பு- திருப்பூரில் பரபரப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்ட விவகாரம் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் தாலுகா அலுவலகம் அருகே, முதல்வர் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இன்று காலை அந்த பேனர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர். நலத்திட்ட உதவிகள் சபாநாயகர் வழங்க இருக்கும் நிகழ்ச்சி நடக்க இருக்கும் நிலையில் பேனர்கள் கிழிக்கப்பட்டு இருப்பது திருப்பூர் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மீது சில அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் அவர்கள் அனைவரும் தனித்தனியாக டிடிவி தினகரனை நேரில் சந்தித்துப் பேசினார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களாக அதிமுகவில் குறிப்பாக தினகரன் அணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி - அமைச்சர் ஜெயக்குமார் அணிக்கும் இடையே பல முட்டல் மோதல்கள் , கருத்து முரண்பாடுகள் நிலவி வருவது தெளிவாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஈரோட்டில் அரசு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அந்த விழாவை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் புறக்கணித்துள்ளார்.
அவருடன் ஏராளமான அதிமுக முக்கிய பிரதிநிதிகளும் முதல்வர் விழாவைப் புறக்கணித்துள்ளனர். இது நேற்று ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருப்பூரில் முதல்வர் மற்றும் சபாநாயகர் பேனர் கிழிக்கப்பட்டுள்ளது கொங்கு மண்டலத்தில் அவர்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்கிறார்கள் அதிமுகவில்.