முதல்வர் கூறுவது போல் மின்தடையில் சதி இல்லை...: மின் வாரிய தொழிற்சங்கம் விளக்கம்
நெல்லை: மின் உற்பத்தியை யாரும் சதி செய்து தடுக்க முடியாது. தேவைகேற்ற மின் உற்பத்தி இல்லாததே மின் வெட்டுக்கு முக்கிய காரணம் என மின்வாரிய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில கோடை காலம் துவங்கி விட்டது. இந்த நிலையில் மின் வெட்டு மீண்டும் தலை தூக்கியுள்ளது. மின்உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து பல ஆயிரம் யூனிட் மின்சாரம் வாங்கிய நிலையிலும் மின் வெட்டு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கிராமங்களில் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த பிரச்சார பொது கூட்டத்தில் பேசிய முதல்வர் தமிழ்நாட்டில் 12 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி உள்ள நிலையில் மின் உற்பத்தி நிலையங்களில் டிரிப் ஆவது, கன்வெயர் பெல்ட் அறுந்து போவது, தீப்பிடிப்பது போன்ற திடீர் நிகழ்வுகளால மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்தடை ஏற்படுகிறது. அடிக்கடி ஏற்படும் இந்த நிகழ்வுக்கு சதி காரணமாக இருக்கலாம், இதற்கு யார் காரணம் என்பதை கண்டுபடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் மின் உற்பத்தி நிலையங்களில் இவ்வாறு சதி வேலை நடைபெற வாய்ப்பே இல்லை என்று மின்வாரிய தொழிற்சங்கத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘காற்றாலை மின் உற்பத்தி பெருமளவு குறைந்தது. கோடை காலம் என்பதால் 24 மணி நேரமும் ஏசி, மின் விசிறி பயன்பாடு அதிகரித்துள்ளது. புதிய மின் இணைப்புகள், மின் நிலையங்களில் ஏற்படும் பழுது போன்ற பல்வேறு காரணங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் நிரந்தர தொழிலாளர்கள் அதிகம் இல்லை. ஓப்பந்த தொழிலாளர்கள்தான் அதிகம் உள்ளனர். அனல் மின் நிலையங்களிலும், முக்கிய மின் உற்பத்தி நிலையங்களிலும் பெரிய துணை மின் நிலையங்களிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், வினியோகம் செய்யவும் அமைக்கப்பட்டுள்ள முக்கிய கருவிகளில் பல 20 ஆண்டுகளை கடந்து உழைத்து வருகின்றன. ஏற்கனவே செயல்படும் இந்த நிலையங்களில் புதிய கருவிகளை பொருத்த வேண்டும். அதுபோல கன்வெயர் பெல்ட் அறுந்து போவது, அதிக சூடு காரணமாக தீபிடிப்பது போன்றவற்றை கண்காணிக்கவும், உடனடியாக பராமரிக்கவும் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.