எம்.எல்.ஏக்களை அழைத்து வந்து நேருக்கு நேர் கேள்வி.. சென்னையில் ஏற்பாடு.. நீங்கள் ரெடியா?
மார்ச்19 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை: மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களை வரவழைத்து அவர்களிடம் மக்களை வைத்தே கேள்வி எழுப்ப ஏற்பாடு செய்துள்ளது அறப்போர் இயக்கம்.
மார்ச்19 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுமேடையில் எம்.எல்.ஏக்களிடம் மக்கள் நேரடியாக கேள்வி எழுப்ப இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த பொதுமேடையில் மக்கள் தொடுக்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் விடையளிக்க வேண்டும். கேள்வி கேட்க மக்களாகிய நீங்கள் தயாரா? என அறைகூவல் விடுத்துள்ளது அந்த அமைப்பு.
கேள்வி கேட்பது எங்களது உரிமை!! பதில் சொல்ல வேண்டியது உங்களது கடமை.. கேளு_தமிழா_கேளு! என்ற கோஷத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறியுள்ளதாவது:
நிகழ்ச்சியின் நோக்கம்
மக்கள் தாங்கள் வாக்களித்த மக்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தேர்தல் நேரத்தில் மக்கள் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்த இந்த எம்எல்ஏக்கள் தேர்தலில் வென்றவுடன் மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்காமல் தமிழகத்தின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் ஊழல் வழக்கில் சிறை சென்ற ஒருவரின் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டனர். மக்களின் கேள்விகளில் இருந்து தப்பிக்க கூவத்தூர் விடுதிக்கு சென்று இந்த எம்எல்ஏக்கள் ஒளிந்து கொண்டனர். இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும். இந்த நிகழ்வின் மூலம் எம்எல்ஏக்கள் நடந்து கொண்ட விதத்திற்கு மக்கள் கேள்வி கேட்க ஒரு வாய்ப்பு அமையும்.
எம்எல்ஏக்கள் வருவார்களா?
ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணி செய்வது அவசியம். அதே நேரத்தில் அவர்கள் மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படும்போது அவர்களை மக்கள் கேள்வி கேட்பது மிகவும் அவசியம். தங்கள் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுத்த எம்எல்ஏக்களை மக்கள் கேள்வி கேட்க இந்த நிகழ்ச்சி ஒரு தளமாக அமையும். வருவது வராமல் இருப்பது அவர்கள் விருப்பம். ஆனால் நாட்டின் குடிமகனாக நமது கடமையை செய்வது அவசியம். நமது கேள்விகளை அறிந்து அதற்கு முறையாக பதிலளிக்க வேண்டிய கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது. அதை அவர்கள் நிறைவேற்றுகிறார்களா என்று பார்க்கலாம்.
யார் ஆதரவாளர்கள்?
நாங்கள் எந்த கட்சியையும் ஆதரிப்பவர்கள் அல்ல. எங்கள் பார்வையில் ஓபிஎஸ், திமுக மற்றும் இதர கட்சிகள் அனைவரும் ஒன்று தான். இதே சசிகலா கும்பலுடன் தான் பதவி பறிபோகும் வரை ஓபிஎஸ் இருந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் அனைவருமே தங்கள் சுயலாபத்தை தான் முக்கியமாக கருதுவார்கள் தவிர மக்கள் நலனை பற்றி அவர்களுக்கு துளியும் கவலை இல்லை. அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு உரிய அனைத்து தார்மீக உரிமைகளையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். ஆனால் இந்த எம்எல்ஏக்களுக்கு நமது வரிப்பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்கும் நாம் கேள்வி கேட்கும் நமது உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது.
எந்த கட்சியை சேர்ந்தவர்கள்?
நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை. தேர்தல் அரசியல் எங்கள் நோக்கம் இல்லை. மக்களுக்கானஅரசியலை நோக்கி தான் எங்கள் பயணம் இருக்கும்.
ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் மீது புகார் ஏன்?
ஒரு இயக்கமாக செயல்படும் போது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தி செயல்படுவது அவசியமாகிறது. கடந்த பல வருடங்களில் பல போராட்டங்களில் மக்கள் மத்திய அரசு, கர்நாடகா மற்றும் கேரள அரசுக்கு எதிராக சாலையில் இறங்கியுள்ளார்கள். ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் மூல காரணமான தமிழக கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாநில அரசை எதிர்த்து மிக குறைவான அளவிலேயே குரல்கள் ஒலித்துள்ளன. அவர்களை தொடர்ந்து அனைத்து விஷயங்களிலும் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு அந்த அமைப்பு தனது வெப்சைட்டில் கூறியுள்ளது.