ஸ்டாண்டை காலி செய்துவிட்டு ஓடுங்கள்.. கோவை ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீஸ் நெருக்கடி
கோவை: கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்றுமாறு, போலீசார் நிர்பந்தம் செய்வதால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறுகையில், கோவை சந்திப்பு ரயில் நிலைய வளாகத்திற்குள் இருந்த ஆட்டோ ஸ்டாண்டை பராமரிப்பு பணிகளை காரணமாக கூறி வெளியே அகற்ற அதிகாரிகள் கூறினர். நாங்களும் வெளியே வந்தோம். பிறகு எங்களை உள்ளேயே விடவில்லை. பல ஆண்டுகளாக வெளியே ஸ்டாண்டு போட்டுள்ளோம்.
இப்போது வெளியே உள்ள ஸ்டாண்ட்டையும் அகற்ற ரேஸ்கோர்ஸ் ரோடு காவல்துறை மூலமாக நெருக்கடிகள் தரப்படுகிறது. நாங்கள் இனி எங்கே செல்வது என்றே தெரியவில்லை என்று கூறினார்.
கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் பல ஆயிரம் பயணிகள் வருகை தருகிறார்கள். ரயில் நிலையத்தின் எதிரேயுள்ள சாலையிலேயே பயணிகளை ஏற்றுவதற்காக ஆட்டோக்களும், டாக்சிகளும் முந்தியடிப்பதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மோதல்களும் நடக்கின்றன. இதனால் பயணிகள் மட்டுமின்றி, கோவை நகர பொதுமக்களும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.