தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தயங்கிய போலீசார் – செல்போனில் ஒலிபரப்பி மானம் காத்த மாவட்ட கலெக்டர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத்தயங்கிய காவல்துறையினருக்கு பதிலடியாக மாவட்ட ஆட்சியர் செல்போனில் வாழ்த்தினை ஒலிபரப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே உள்ள தேக்கந்தோட்டத்தில் புதிய போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தொடக்க விழாவில் சோதனைச் சாவடியை போலீஸ் டிஜ.ஜி அறிவுச்செல்வம் திறந்து வைத்தார். அவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அரசு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படும். இவை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படும்.
ஆனால் நேற்று நடந்த விழாவில் ஒலிபெருக்கி ஆபரேட்டர் தேசியகீதத்தை ஒலிபரப்பினார். இதனை அதிகாரிகள் சுட்டிக்காட்டியதால் உடனே நிறுத்தப்பட்டது. பதறிபோன ஆபரேட்டர் தமிழ்த்தாய் வாழ்த்து குறுந்தகட்டை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
இத்தேடல் சிலநிமிடம் நீடித்ததால் அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் யாராவது 2 போலீசார் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வாருங்கள் என்றார். ஆனால் போலீசார் யாரும் முன்வராமல் நெளிந்தனர்.
அதிகாரிகளும் சங்கடத்தில் நெளிய பொது மக்கள் மாவட்ட ஆட்சியரின் முகத்தை பார்த்தனர். இதையடுத்து கலெக்டர் மைக் முன்பு சென்றார்.
பின்னர் தனது செல்போனை ஆன் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தை பாட செய்தார். தமிழ்த்தாய் ஒலித்ததும் அதிகாரிகள் கம்பீரமாக நின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் பாடலை ஒலிபரப்பிய கலெக்டர் ஏன் அவரே பாடவில்லை என்பதும் புரியவில்லை!