ஒரு பெண்ணின் கற்புக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை.. ஹைகோர்ட் நீதிபதிகள் வேதனை
நாடு சுதந்திரமடைந்த இத்தனை ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஒரு பெண்ணின் கற்புக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை: நாடு சுதந்திரமடைந்த 69 ஆண்டுகள் ஆகியும், நம்மால் ஒரு பெண்ணின் கற்புக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்பதை நினைத்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன் காதலனுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு கோவிலுக்குச் காரில் சென்றார். மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது போடம்பட்டி என்ற இடத்தில் காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இருவரையும் காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றனர். காதலனை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பின்னர், அந்த மாணவியை காதலன் கண் முன்னே கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவும் எடுத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த ஜி.பிரகாஷ்(வயது 24), சுப்ரூ என்ற சுப்பிரமணி(26), ஐ.ஜி.மணி(23), டி.பிரகாஷ்(24) ஆகியோரை ராயக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மாணவியிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள், செல்போன், அதில் உள்ள 'மெமரி கார்டு' ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைதான ராயக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட 4 பேருக்கு, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், மனிதர்கள் தான் பொய் சொல்வார்கள். அறிவியல் ஒரு போதும் பொய் சொல்லாது.
மருத்துவ மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் அனைத்தும், இவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபித்துள்ளது. எனவே கீழ் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். ஆயுள் தண்டனையை இவர் முழுமையாக அனுபவிக்க வேண்டும். முன்கூட்டியே விடுதலை என்ற சலுகையை எதுவும் அரசு வழங்கக்கூடாது.
மேலும், இந்த வழக்கை பார்க்கும் போது, நாடு சுதந்திரமடைந்த 69 ஆண்டுகள் ஆகியும், நம்மால் ஒரு பெண்ணின் கற்புக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை. இதை நினைத்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
எனவே, இளைய சமுதாயத்தினருக்கு நம்முடைய கலாச்சாரம், பண்பாடு, மகாந்தமா காந்தியின் கொள்கை ஆகிய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் கீழ் மாணவிக்கு, 8 லட்சம் ரூபாயை வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.