தூ தூ வெட்கக் கெடு.. நீட்டை எதிர்த்து 2வது நாளாக கொதித்தெழுந்த தமிழக, புதுவை மாணவர்கள்
அனிதாவுக்கு நீதி கேட்டு தமிழகம் மற்றும் புதுவையில் 2-ஆவது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை/புதுவை : நீட் தேர்வால் மருத்துவ படிப்பு பறிபோனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவையில் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற முடியாததால் அரியலூர் அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. எனினும் விடாபிடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அன்று முதல் அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போராட்டம்
தமிழகத்தில் கும்பகோணம், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, விருத்தாசலம், தூத்துக்குடி, நெல்லை சங்கரன்கோவில், அரியலூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுவையில் போராட்டம்
அனிதாவுக்கு நீதி கோரி புதுவையில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகையை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

வீரியம் அடைந்த போராட்டம்
தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்களின் எழுச்சி போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இவர்களை சமாளிக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

2-ஆவது நாளாக போராட்டம்
இந்நிலையில் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் திருவாரூர் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரி, வேலூர் திருப்பத்தூர் கல்லூரி, மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கடலூர், நாகை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறந்தாங்கியில்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் அனிதா இறப்பிற்கு நீதி விசாரணை கோரியும் வகுப்புகளை புறக்கணித்து 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.












Click it and Unblock the Notifications