அணி தாவுகிறாரா கருணாஸ்?- மத்திய அமைச்சருடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு
Recommended Video

நெல்லை: தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை சரியாக இல்லாத இந்த நேரத்தில் சிரிப்பு நடிகர் கருணாஸ் எம்எல்ஏ பாஜக மத்திய அமைச்சரை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெரும்பான்மை இழந்த எடப்பாடி ஆட்சி நீடிக்குமா என்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த அரசு நீடிக்குமா, நீடிக்காதா என்ற பெரும் கேள்விக்கு மத்தியில் மூவர் அணி என கூறப்படும் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தனித்து செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் சில நேரம் அரசுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். சில நேரம் தினகரனுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். திடீரென மு.க.ஸ்டாலினையும் சந்திக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கருணாஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

கோவிலுக்கு வந்த இடத்தில்
இந்நிலையில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பொன் ராதாகிருஷ்ணன் வந்தார். சாமி கும்பிட்டு விட்டு நாகர்கோவிலுக்கு காரில் செல்ல புறப்பட்டார்.

கல்யாணத்துக்கு வந்த கருணாஸ்
அப்போது திருச்செந்தூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ ஓய்வு எடுக்கும் பொருட்டு கோயில் வாளகத்தில் உள்ள தேவர் குடிலுக்கு காரில் வந்தார். அப்போது அவர் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தார்.

கால் மணி நேரம் சந்திப்பு
காரில் இருந்து இறங்கி வந்து இருவரும் தனிமையாக 15 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய பேச்சுக்கு பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

சும்மா மரியாதைக்காக
இதுகுறித்து கருணாஸ் எம்எல்ஏ கூறுகையில், திருச்செந்தூரில் திருமண விழாவில் கலந்து கொண்டு ஓய்வு எடுக்க சென்ற போது மத்திய அமைச்சரை பார்க்க நேர்ந்தது. இது மரியாதை நிமித்தாக நடந்த சந்திப்புதான்.

அவ்வளவுதான்
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த சந்திப்பின் போது வைத்தேன். அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார். உண்மையான காரணம் இதுதானா அல்லது கருணாஸ் கலர் மாறப் போகிறாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications