சாதி பெயரைச் சொல்லி திட்டினார்.. சசிகலா புஷ்பா மீது போலீசில் பரபரப்பு புகார் !
தூத்துக்குடி: சசிகலா புஷ்பா எம்.பி., சாதி பெயரைச்சொல்லி திட்டியதாக நாசரேத் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவர் சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறி பெரும் பரபரப்பை உருவாக்கினார் சசிகலா புஷ்பா எம்.பி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதனிடையே ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார் இதன் பின்னர் சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன. இதில் அவரது வீட்டில் வேலைபார்த்த நெல்லை திசையன்விளையை சேர்ந்த பானுமதி என்பவர் தனது சகோதரி ஜான்சிராணியுடன் சேர்ந்து வந்து கடந்த சில தினங்களுக்கு தூத்துக்குடி எஸ்பி அலுவலக்தில் புகார் செய்தார்.
இந்நிலையில்,தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். கட்டிட தொழிலாளியான இவர் சாத்தான்குளம் டி.எஸ்.பி. கண்ணனிடம் இன்று இரவு சுமார் 10 மணி அளவில் சசிகலா புஷ்பா எம்.பி. மீது புகார் கொடுத்திருக்கிறார்.
அதில், சசிகலா புஷ்பாவும், அவரது தந்தை தியாகராஜனும் நவ்வலடி கிராமத்தில் அய்யா கோவில் கட்டுவதற்காக சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் பேசியவர்கள், அதற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் தொகையாக நிர்ணயம் செய்தார்கள். நான் அந்த வேலையை முடித்துக் கொடுத்தேன். ஆனால் அவர்கள், எனக்கு 20 ஆயிரம் மட்டுமே தந்தவர்கள், மீதம் உள்ள ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் தரவில்லை.
பல மாதங்கள் ஆகியும் நான் கேட்டதற்கு பதில் கிடைக்கவில்லை. பணமும் தர முடியாது என்றார்கள். என்னுடையை தம்பியின் ஆட்டோவையும் பறித்து வைத்துக்கொண்டார்கள். அதை நான் கேட்டபோது, உன்னை தொலைத்துவிடுவேன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு வரவேண்டிய பாக்கி பணத்தையும் மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.