அறிவிச்ச கையோடு சட்டுபுட்டுனு அமலுக்கு வந்த கட்டண உயர்வு... ரூ. 50, மாத சலுகை பாஸ்காரர்கள் அவதி!
அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு அறிவித்த உடனேயே அமலுக்கு வந்துள்ளதால் ரூ. 50 சலுகை பாஸ் கொடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவற்றை நடத்துனர்கள் வழங்க மறுப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை : அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு அறிவித்த உடனேயே அமலுக்கு வந்துள்ளதால் மாத பாஸ் கட்டணம் எவ்வளவு, அன்றாடம் சென்று வர வழங்கப்படும் ஒரு நாள் பாஸான ரூ. 50 பாஸ் வழங்குவதிலும் குழப்பம் இருப்பதால் அதனை தர நடத்துனர்கள் மறுப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
தமிழத்தில் அரசு பஸ்களின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு நேற்று இரவு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியான கையோடு கட்டண உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ. 14 ஆகவும் இருந்தது. இன்று முதல் குறைந்தபட்சம் ரூ. 5 ஆகவும் அதிகபட்சம் ரூ. 23 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
சாதாரண பேருந்துகள் இயக்கப்படவில்லை
ஏற்கனவே சென்னையில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ்க்கு மாறிவிட்டன. சாதாரண பேருந்துகளான ஒயிட் போர்டு, பச்சை போர்டு (எக்ஸ்பிரஸ் பேருந்து) இவற்றின் இயக்கம் என்பது பீக் ஹவர்களில் கிடையாது. இதனால் மக்கள் காத்திருக்காமல் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
பயணச் செலவு சுமையாகிறது
இந்நிலையில் திடீர் கட்டண உயர்வு அன்றாட பயணச் செலவை மேலும் சுமையானதாக்கிவிடும் என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் மக்கள். காலை முதலே கட்டண உயர்வு அமலுக்கு வந்ததால் மாத பாஸ் வைத்திருக்கும் பயணிகளிடம் சில நடத்துநர்கள் கூடுதல் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொல்வதாக தெரிவிக்கின்றனர்.
ரூ. 50 பாஸ் வழங்கப்படவில்லை
மேலும் ஒரு நாள் பாஸ் என்று பேருந்துகளில் வழங்கப்படும் ரூ. 50 பாஸ் வழங்குவதை கண்டக்டர்கள் முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். ரூ. 50க்கு பாஸ் எடுத்தால் ஒரு நாள் முழுவதும் சென்னையின் அனைத்து பேருந்துகளில் பயணிக்கலாம் டிக்கெட் வாங்கத் தேவையில்லை, அப்படி இருக்கையில் கட்டண உயர்வில் இது குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறாததால் அவற்றை வழங்க கண்டக்டர்கள் மறுப்பதாக தெரிகிறது.
மாத பாஸ் கட்டணம் பற்றி விளக்கவில்லை
இதே போன்று மாதக்கடைசி நெருங்குவதால் அன்றாடம் அலுவலகம் செல்வோர் மாத பாஸ் எடுப்பதற்காக டிக்கெட் கவுண்டர்களை அணுகியுள்ளனர். ரூ. 1000 வீதம் வழங்கப்படும் இந்த மாத பாஸ்க்கான கட்டணமும் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் பாஸ் கிடையாது என்ற பதிலே கிடைத்துள்ளது. ஏனெனில் கட்டண உயர்வின்படி மாத பாஸிற்கு எவ்வளவு கட்டணம் என்பதை அரசு நிர்ணயித்து அறிவிக்காததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சலுகை பாஸ் பெறும் பயணிகள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.