தமிழகத்தில் தாமரை... இல்லை இல்லை.. அரசியல் நாகரீகம்.. நன்றாகவே மலர்ந்து கொண்டிருக்கிறது!
அரசியல் நாகரீகம் மலர்ந்து வருவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி: தமிழகத்தில் அரசியல் நாகரீகம் மலர்ந்து கொண்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழிசையின் கூற்று உண்மை இல்லாமல் இல்லை. அரசியல் நாகரீகம் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளதுடன், அவை நடமாடவும் துவங்கிவிட்டது என்பது நிரூபணமாகி வருகிறது. குறிப்பாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்த போதிலிருந்தே இந்த நாகரீகம் மெல்ல மெல்ல வரத் தொடங்கியது.
தமிழிசை மீது கருணாநிதிக்கு எப்போதுமே தனி பாசம் உண்டு. அதற்கு காரணம், குமரியார் மகள் என்பதுதான். அடிக்கடி மேடைகளில் பேசும்போதுகூட "குமரியார் மகள் அரசியல் நாகரீகத்துடன் இருப்பார்.. மக்கள் விரோத கட்சியிலே அங்கம் வகித்தாலும் அவரது அடிப்படை குணம் ஒருபோதும் மாறாது" என்றும் புகழ்ந்திருக்கிறார். அதேபோல தமிழிசையும் எந்த அரசியல் தலைவர்களையும் மரியாதையுடனும், அண்ணே என்ற உரிமையில் அழைத்து கண்டித்து, விமர்சித்தும் பழக்கப்பட்டவர்.
உருக்கமான பேச்சு
இதேபோல்தான், நெல்லையில் கருணாநிதிக்கு அரசியல் கட்சிகள் சார்பில் நடந்த அஞ்சலி கூட்டத்திலும் தமிழிசை பல மதிப்புமிக்க கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதில் சில கருத்துக்கள் உருக்கம் நிறைந்தவையாகவும், சில கருத்துக்கள் மனதுக்கு நிறைவானதாகவும், சில கருத்துக்கள் நகைச்சுவை ததும்ப கூடியதாகவும் பேசினார்.
முதுகில் குத்துகிறார்கள்
"மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கருணாநிதியிடம் மருத்துவர்கள், சுகர் இல்லாமல் கண்ட்ரோல் செய்திருக்கிறீர்களே.. முதுகுவலி எப்படி வந்தது என்று ஒரு கேள்வி கேட்டார்களாம். அதற்கு கருணாநிதி, ‘சுகரை நான் கண்ட்ரோல் செய்தேன். ஆனால் அரசியலில் முதுகில் குத்துபவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் முதுகுவலி வந்துவிட்டது என்றாராம்" என்று தமிழிசை சுவாரசிய தகவலை குறிப்பிட்டார்.
பாரத ரத்னாவாக ஜொலிப்பார்
மேலும், "தனது தொண்டர்களுடைய எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றிய கருணாநிதி, தமிழக மக்கள் வைத்த எழுந்து வா என்ற கோரிக்கையை மட்டும் நிறைவேற்றாமலேயே போய்விட்டாரே" என்று நெகிழ்ச்சியுடன் தமிழிசை பேசினார். அதேபோல, மாநில முதல்வர்களுக்கும் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி என்றும், அவரது மறைவுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, மாநிலங்களவை, மக்களவைகளும் ஒத்திவைக்கப்பட்டன என்றார். பாரதத்தில் உள்ள பல ரத்னங்கள் இருந்தாலும், அதில் அவரும் ஒருவர்... அவர் பாரத ரத்னாவாக ஜொலிக்கப்போகிறார் என்று தமிழிசை உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்தார்.
அரங்கம் அதிர்ந்தது
"நடக்க முடியாத ஒரு காரியத்தையும் நடத்திக்காட்டக்கூடியவர் கருணாநிதி. அதுதான் அவரது ஆளுமை. தனித்திறமை. அவர் இறந்தபிறகும்கூட, திக.,தலைவர் வீரமணியின் அருகில் தமிழிசையை பக்கத்தில் உட்காரவைத்து சென்றுவிட்டார் என்றால் அதுதான் கருணாநிதி என்றார். தமிழிசை இப்படி பேசியதும், அரங்கமே அதிரும் கைத்தட்டல் ஒலித்தது. இந்த வரிகளைத்தான் பல்வேறு தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி காட்டியும் வருகின்றன.
மலர்கிறது நாகரீகம்
"சென்னைக்கு வாஜ்பாய் அஸ்தி வந்தபோது, முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தியவர் ஸ்டாலின் என்று கூறிய தமிழிசை, வாஜ்பாய், கருணாநிதி இருவரும் விண்ணுலகம் சென்று அரசியல் அனுபவங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். தமிழகத்தில் அரசியல் நாகரீகம் மலர்ந்து கொண்டிருக்கிறது என்று தன் பேச்சை தொடங்கிய தமிழிசையின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மை!