காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் இதுதான் !
சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முக்கியமாக 8 கேள்விகள் எழுப்பப்பட்டன.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே வேட்பாளர் நேர்காணலை முடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்குவதற்கு கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று தொடங்கியது. வேட்பாளர் நேர்காணல் அந்ததந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது.
சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடந்து வருகிறது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முக்கியமாக 8 கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதில், விருப்ப மனு அளித்தவர்கள் தங்களுக்கு அளித்த படிவத்தில், கட்சியில் எத்தனை வருடமாக அங்கம் வகித்து வருகின்றனர். கட்சியில் முன்பு வகித்த பதவி, தற்போது வகிக்கின்ற பதவி, கட்சிப் பணியில் அனுபவம், போட்டியிட விருப்பம் தெரிவித்த தொகுதியில் கட்சி, கூட்டணி கட்சிகளின் பலம் எப்படி உள்ளது.
முந்தைய தேர்தல்களில் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருந்தது. தொகுதியில் சி்றுபான்மை, இதர சமுதாயத்தினர் வாக்குகள் விவரம், தேர்தலில் எவ்வளது பணம் செலவு செய்ய முடியும், தொகுதியில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்ட விவரம், வெற்றி வாய்ப்புக் குறித்து தகவல் என கேட்கப்பட்ட 8 கேள்விகளுக்கு விவரங்கள் எழுதி அளித்தனர்.