500, 1,000 ரூபாய் செல்லாது.. மொட்டை அடித்து எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் பிரமுகர் !
மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குடியாத்தம் ஸ்டேட் பாங்க் முன்பு ஒருவர் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினார்.
வேலூர்: 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடியாத்தத்தில் வங்கி முன்பு காங்கிரஸ் பிரமுகர் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினார்.
நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகிவிட்டது. மாற்று ஏற்பாடாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கி முன்பு பல மணிநேரம் காத்திருந்தும் மாற்ற முடியாமல் ஏமாற்றம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இன்னும் பல ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்ட நிலையிலே காட்சி அளிக்கின்றன. சில ஏடிஎம்களில் நிரப்பப்படும் 100 ரூபாய் தாள்கள் ஒரு சிலநிமிடங்களில் தீர்ந்து விடுகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். காங்கிரஸ் பிரமுகரான இவர் பழைய ரூ.500,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குடியாத்தம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு மொட்டை அடித்து போராட்டம் நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.