தேர்தலில் போட்டியிடாத சிதம்பரம் மீது கோபம்.. பிரசாரத்துக்கு வர ராகுல் மறுப்பு?
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்ததால் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட மறுத்துவிட்டார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். அங்கு தன் மகனை வேட்பாளராக நிறுத்திவிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எப்படியாவது அழைத்து வந்து பிரசாரம் செய்ய வைத்துவிட வேண்டும் என்று பல முறை முயற்சித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் அந்த காரணம், இந்த காரணம், பாதுகாப்பு எனச் சொல்லி ராகுல் நிராகரித்துக் கொண்டே இருக்கிறாராம்.
இதனால் ப.சிதம்பரம் நொந்து நூலாகிப் போய்கிடக்கிறாராம். உண்மையில் தேர்தலில் சிதம்பரம் போட்டியிட மறுத்துவிட்டு ராஜ்யசபா எம்.பி.யாக முயற்சித்துக் கொண்டிருப்பதால் வந்த கோபம்தானாம் ராகுலுக்கு. அதனால்தான் சிவகங்கை பக்கம் எட்டிப் பார்க்க விரும்பாமலே தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார் என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.