அதிமுக அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை... ஆளுநரிடம் காங்.எம்எல்ஏ கடிதம்
அதிமுக அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கடிதம் அளித்துள்ளனர்.
சென்னை: அதிமுக அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கடிதம் அளித்துள்ளனர். இதேபோல் அதிமுக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திமுகவும் கோரிக்கை விடுத்துள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் துணை முதல்வராகவும், நிதி, நகர்ப்புறம் , வீட்டு வசதித்துறை, திட்டமிடல் உள்ளிட்ட அமைச்சரவைகளையும் பெற்றார். அதேபோல் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
மேலும் விரைவில் பொதுக் குழுவை கூட்டி சசிகலாவையும் நீக்குவதாக அதிமுக அணிகள் இணைப்பின் போது கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் நேற்று ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் 113-ஆக குறைந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏ-க்கள் தேவை. இதனால் எடப்பாடி அரசு மீண்டும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளனர்.
அதன்படி காங்கிரஸ் கட்சி எம்எ்லஏ-க்களின் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை இல்லை. எனவே அந்த அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஆளுநரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் ராமசாமி கூறுகையில், ஊழல் அரசு என்று கூறிய ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி ஏன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நாடகமாடின என்றார் அவர்.