அடக்கொடுமையே.. திருப்பூர் டாஸ்மாக் கடைக்கு ரோடு, மின்சாரத்தை போர்க்கால அடிப்படையில் கொடுத்த அரசு
ஒருபக்கம், சாலையில்லாமல் மாணவர்கள் நடந்து செல்லும் அவலநிலை உள்ளபோதிலும், குடிமகன்களுக்காக படுவேகத்தில் சாலையும், மின்சார இணைப்பும் திருப்பூர் டாஸ்மாக் கடைக்கு தயாராகி உள்ளது.
திருப்பூர்: பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சாலை வசதி இல்லாமல் பல கி.மீ. தூரம் நடந்தும், தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தும் வரும் நிலையில் குடிமகன்கள் சொகுசாக வந்து குடித்து விட்டு செல்ல புல்லட் ரயில் வேகத்தில் திருப்பூர் டாஸ்மாக் கடைக்கு நடைபெற்றுள்ளது.
குடியை குடியைக் கெடுக்கும் என்ற சொலவடைக்கு ஏற்ப இன்றும் நாடு முழுவதும் பல குடும்பங்களின் குடி கெட்டுள்ளது. இதற்கு இளம் விதவைகளும், அறியா பருவத்தில் தந்தையை இழந்து நிற்கும் குழந்தைகளும், வீடு, வாசல் ஆகியவற்றை குடித்தே அழித்து நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட குடும்பத்தினருமே சாட்சி.
அத்தகைய ஆபத்தை விளைவிக்கும் டாஸ்மாக் கடைகளை மாநில அரசு தெருவுக்கு தெரு திறந்துள்ளது. பள்ளிகள், ரேஷன் கடைகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றைக் காட்டிலும் டாஸ்மாக் கடைகளே அதிகம் என்று சொல்லும் நிலை உள்ளது.
சாலை விபத்துகள்
நெடுஞ்சாலைகளில் லாரி, பேருந்து, 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அங்குள்ள மதுக்கடைகளில் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டியதால் அப்பாவிகள் மீது வாகனம் மோதி உயிரிழந்தவர்கள் ஏராளம். இதை கருத்தில் கொண்டு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் அதிரடி
இதைத் தொடர்ந்து அரசு வருமானத்துக்காக உயிர்களை பலியிடுவது நியாயமில்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட் கடந்த 1-ஆம் தேதி முதல் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள்பட்ட கடைகளை அகற்ற உத்தரவிட்டது. எனினும் இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் மேல் முறையீடு செய்துள்ளன.
மாற்று இடம்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் பணியை இழந்துள்ளனர். இதனால் ஊருக்குள் கடை வைக்க மாற்று இடம் தேடுமாறு டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் கடை அமைக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பெண்ணுக்கு ஏடிஎஸ்பி அறை
இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைந்து போக சொல்லியும் கேட்காததால் ஆத்திரம் அடைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு பெண்ணை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் ஒருவரின் மண்டையையும் உடைத்தார். இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சர்ச்சையால் கடை திறக்கும் முடிவு கைவிடப்பட்டது.
அடிப்படை வசதிகள்
இந்த டாஸ்மாக் கடைக்கு தேவையான சாலை வசதியும், மின் இணைப்பு வசதியும் புல்லட் ரயில் வேகத்தில் கொடுக்கப்பட்டது. மின் இணைப்பு பெற பொதுமக்கள் பல மாதங்களாக காத்து கிடக்கின்றனர். இதனால் ஏழை மாணவர்கள் தெரு விளக்கு வெளிச்சத்திலும், காடா விளக்கு ஏற்றி வைத்தும் படித்து வருகின்றனர்.
கால் கடுக்க ...
அதேபோல் பல்வேறு கிராமங்களில் தொடங்கப்பட்ட சாலைகள் உத்தேச தேதியை தாண்டியும் இன்னும் முடிக்காமலும் பல சாலைகளுக்கு பிள்ளையார் சுழிக்கூட போடாத நிலை உள்ளது. மேலும் சாலை வசதி இல்லாததால் பேருந்துகளை இயக்க மறுப்பதால் மாணவர்கள் பல கி.மீ. தூரம் நடந்தே செல்கின்றனர். இன்னும் சில இடங்களில் பரிசல் மூலம் ஆபத்தான ஆற்றைக் கடக்கின்றனர். இந்தியா வல்லரசாக அப்துல் கலாம் கனவு கண்டார், ஆனால் இதுபோன்ற டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கு்ம முக்கியத்துவத்தையும், கவனத்தையும் மாணவர்கள், பொதுமக்களுக்கு அரசாங்கம் கொடுப்பதில்லை என்பது வெட்ககேடான சம்பவமாகும். இவ்வாறு குடிமகன்கள அலுங்காமல் குலுங்காமல் குடித்து விட்டு போக சாலையும், மின் இணைப்பு போன்ற வசதிகள் கொடுத்தால் இந்த நாடு உருப்படுமா?