நோயாளிகளிடம் கட்டாய பண வசூல்- சென்னை அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் அட்டகாசம்!
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் ஒப்பந்த ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பண வசூல் செய்வது நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மருத்துவமனையில் பல்வேறு வகையான நோய்களுக்காக ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், மருத்துவ பரிசோதனைகளுக்கு அழைத்து செல்லுதல், வார்டுகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
650 ஊழியர்கள்:
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 650 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
மாதச் சம்பளம்:
இவர்களுக்கு பணிகளின் அடிப்படையில் ரூபாய் 5,200 முதல் ரூபாய் 9 ஆயிரம் வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
இலவச சேவைகளுக்கு வசூல்:
நோயாளிகளுக்கு "ஸ்கேன்", "எக்ஸ்-ரே" எடுப்பது, சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு இலவச சேவைகளுக்கு ஒப்பந்த பணியாளர்கள் சிலர் கட்டாய பணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
அதிக அளவில் பணம்:
அதிக நோயாளிகள் வரும் விபத்து சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு அவசர சிகிச்சை உள்ளிட்ட சில வார்டுகளில் அதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது.
கேமராவில் பதிவு:
மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் கட்டாயமாக பணம் வசூலிக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
நடவடிக்கை இல்லை:
இதனை பார்த்த பின்னரும் மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கட்டாய வசூலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசு மருத்துவமனையில் உள்ள இலவச சேவைகளை ஏழை, எளிய மக்களும் எளிதாக பெறமுடியும்.