எதற்கும் கட்டுப்படாத டெங்கு, சிக்குன்குனியா, ரங்குஸ்கி கொசுக்கள்: 1913க்கு உடனே கூப்பிடுங்க
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளது. புகை, மருந்துகளுக்கு கட்டுப்படாத கொசுக்கள்தான் மூலம்தான் நோய்கள் பரவுகின்றன. குளிர்காலம் முடிந்து வெயில்காலம் தலைகாட்டத் தொடங்கிய பின்னரும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் உள்ள 17 லட்சம் வீடுகளுக்கும் சுகாதாரம் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்காக 500 வீடுகளுக்கு ஒரு ஊழியர் வீதம் 3,500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புகைக்கு கட்டுப்படலையே
563 மருந்து தெளிப்பான் கருவிகள், பைரிதிரியன் எனப்படும் வேதிப்பொருளை கொண்டு புகை வெளியிடும் 384 கருவிகள் ஆகியவற்றை கொண்டும் கொசுக்களை ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 42 ஆட்டோக்கள் மூலமாகவும் சுழற்சி முறையில் கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது. தினமும் புகை மருந்து அடித்தும் கொசுக்கள் கட்டுப்படவில்லை.
ஆயில் ஊற்றியும்
குளம், குட்டை, ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் கொசுக்களை ஒழிக்க மாதம் 20 ஆயிரம் லிட்டர் மஸ்கி யூட்டோ லார்விசிடல் ஆயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி கொசுக்களை ஒழிக்க பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் சென்னை நகரில் குறைந்தபாடில்லை என்பது குடியிருப்பாளர்களின் கவலையாகும்.
1913க்கு கூப்பிடுங்க
இதற்கிடையே சென்னை நகரில் கொசுத்தொல்லை இருந்தால் 1913 என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆனந்த் கூறியுள்ளார். புகார் தெரிவிக்கும் இடங்களில் உடனடியாக கொசுக்கள் ஒழிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடையாறு - அண்ணாநகரில்
இதற்கிடையே அடையாறு, கோடம்பாக்கம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் கொசுக்கள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் இது பற்றி மாநகராட்சிக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளனர்.
அதிகம் புகார்கள்
கொசுக்களை ஒழிக்க வலியுறுத்தி ஒரே நாளில் 44 புகார்கள் வந்துள்ளன. இதில் அடையாறில் இருந்து மட்டும் டெலிபோனில் 10 புகார்கள் வந்துள்ளன. அண்ணாநகரில் இருந்து 7 புகார்கள் வந்துள்ளன.
மருந்து தெளிக்க வாங்க
திருவொற்றியூர், மணலி, மாதவரம், வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சில புகார்கள் வந்துள்ளன. தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கத்தில் இருந்து அதிகமான புகார்கள் வந்துள்ளன. புகார் தெரிவிப்பவர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் ஸ்பிரே மருந்து தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உடனுக்குடன் நடவடிக்கை
எந்தெந்த வாரங்களில் எந்தெந்த பகுதிகளில் கொசு மருந்து தெளிப்பது, புகை வெளியிடும் கருவிகள் மூலம் கொசுவை ஒழிப்பது என்று பட்டியல் தயார் செய்யப்பட்டு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகார் வரும் பகுதிகளில் 25 முதல் 30 தெருக்களில் 20 முதல் 25 கி.மீ. நீளத்துக்கு தினமும் கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதெல்லாம் இருக்கட்டும்
கொசுவை ஒழிக்க மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க வீட்டில் எத்தனையோ கொசு ஒழிப்பான்களை வைத்தும் இந்த ரங்குஸ்கிகளை கட்டுப்படுத்த முடியலையே என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் சென்னைவாசிகள்.