டி.என்.பி.எல். ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 37 லட்சம் மோசடி செய்த தம்பதி
கரூர்: கரூர் டி.என்.பி. எல். தொழிற்சாலையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 37 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி தலைமறைவாகியுள்ளனர்.
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். அவர் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் டி.என்.பி.எல். தொழிற்சாலையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி மாரியப்பனிடம் சுமார் 17 பேர் ரூ 37 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் மாரியப்பன் யாருக்கும் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
பணம் கொடுத்தவர்கள் வேலை வேண்டாம், பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் மாரியப்பன் அதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட 17 பேர் மோசடியில் ஈடுபட்ட மாரியப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி விஜயா ஆகியோர் மீது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாரியப்பன், விஜயா உள்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்த மாரியப்பன், விஜயா ஆகியோர் திடீர் என தலைமறைவாகிவிட்டனர்.
மாரியப்பனுக்கும், டி.என்.பி.எல். தொழிற்சாலை சென்னை அலுவலகத்தில் உள்ள ஒரு சில உயர் அதிகாரிகளுக்கும் நெருக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தான் அவர் துணிந்து இந்த காரியத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications