சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி தம்பதி பலி: 4 மின் ஊழியர்கள் சஸ்பெண்ட்
சென்னை: வேளச்சேரியில் மின்கம்பி அறுந்து விழுந்து தம்பதியர் பலியான சம்பவம் தொடர்பாக மின்சார ஊழியர்கள் நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கருணாநிதி,29. இவரது மனைவி சுதா.26. இவர்களுக்கு ஆர்த்திஸ்ரீ,4 திவ்யாஸ்ரீ. 2 என 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் கருணாநிதி தனது மனைவி, 2 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். வழியில், வீட்டின் அருகே உள்ள மாவு கடையில், இட்லி மாவு வாங்குவதற்கான நின்றிருந்தார். அப்போது அங்கிருந்த உயர் அழுத்த மின்சார வயர் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதைக் கண்டதும் பதறிய கணவன்-மனைவி இருவரும் தங்கள் குழந்தைகளை காப்பாற்ற அருகில் உள்ள மணல் பகுதியில் அவர்களை தள்ளிவிட்டனர்.
அப்போது அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்சார வயர் கருணாநிதி, சுதா ஆகியோர் மீது விழுந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதைக் கண்ட 2 குழந்தைகளும் கதறி அழுதனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டனர்.
பின்னர், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சார இணைப்பை துண்டித்தனர். காயங்களுடன் இருந்த 2 குழந்தைகளையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த ஏராளமானோர் மேற்பட்டோர் வேளச்சேரி பை-பாஸ் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்கள், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. அடிக்கடி மின்சார வயர்களும் அறுந்து விழுகின்றன. இதுபற்றி மின் வாரியத்திற்கு பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அலட்சியத்தால் தற்போது 2 பேர் பலியாகி 2 குழந்தைகளும் அனாதையாகி விட்டனர் என்று குற்றம் சாட்டினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர்கள் முருகேசன், குமார், அழகு, நந்தகுமார், தன்ராஜ் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.
ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களோ, 2 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமான மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர்.
நீண்ட நேரத்திற்கு பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனிடையே தம்பதியர் உயிரிழக்க காரணமான மின்சார ஊழியர்கள் நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து மின்சார வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.