வறண்டு போன குற்றால அருவிகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
நெல்லை: கோடைக்காலம் போல் வெயில் கொளுத்தி வருவதால் பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகள் வறண்டு போய் விட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
வெப்ப சலனம் காரணமாக நேற்று மாலை முதல் இரவு வரை நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆனால் குற்றாலத்தில் மழை இன்றி கோடை போல் வெயில் வாட்டி வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது.

மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் பாறையையொட்டி சிறிதளவு தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளிலும் குறைவாக தண்ணீர் விழுந்தது. அதே வேளையில் பழைய குற்றால அருவியும், புலியருவியும் வறண்டு போய் விட்டன. அங்கு வெறும் பாறை பொருளாக மட்டுமே காட்சி தருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
ஐந்தருவி, மெயின் அருவியில் ஓரளவுக்கு தண்ணீர் விழுவதால் இரவில் சிலர் குளிக்க வருகின்றனர். சில சமயங்களில் பெண்களும் குடும்பத்துடன் குளிக்க வருகின்றனர். ஆனால் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் அச்சத்துடன் குளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனிடையே நேற்று இரவு 8 மணி முதல் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாப்ர பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மழையினால் அருவிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.












Click it and Unblock the Notifications